சென்னை: என்.எல்.சி. நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக மதிமுக பொது செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
என்.எல்.சி. நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை விற்க, 2002ம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முயற்சி செய்த நேரத்தில், நாடாளுமன்றத்திலும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடமும் மதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன்.
அன்றைய பிரதமர் வாஜ்பாய் தமிழக மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்து, என்.எல்.சி. பங்குகளை விற்க மாட்டோம் என அறிவித்தார். தற்போது மத்திய நிலக்கரித்துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், என்.எல்.சியின் 10 சதவீத பங்குகளை விற்று ரூ. 2,400 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.
மத்திய அரசு, என்.எல்.சி. நிறுவனத்தை படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதை மத்திய நிலக்கரித்துறை அமைச்சரின் அறிவிப்பினால் அறிய முடிகிறது.
தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்புகளை மீறி, என்.எல்.சி. நிறுவனத்தை தனியார் மயமாக்கிட தொடர்ந்து முயற்சித்து வரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் என்.எல்.சி. பங்குகள் விற்கும் திட்டத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app




