
டாலிவுட்: ஐஸ்வர்யா ராய்க்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று (ஆக.6) ஐதரபாத்தில் நடந்த எந்திரன் படத்தின் தெலுங்கு பதிப்பின் இசை வெளியீடு விழாவில் அவரால் கலந்துக் கொள்ள இயலவில்லை.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கும் படம் எந்திரன். இந்தப் படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரப் போகிறது. எந்திரன் படம் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப் பட்டு வெளிவரப் போகிறது.
எந்திரன் தமிழ் படத்தின் இசை வெளியீடு அண்மையில் மலேசியாவில் நடந்தது. இந்தி பதிப்புக்கான இசை வெளியீடு வரும் வாரம் மும்பையில் நடக்கப் போகிறது. இந்நிலையில், தெலுங்கு பதிப்புக்கான இசை வெளியீடு நேற்று (ஆக.6) ஐதரபாத்தில் நடந்தது.
இதில், ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ரோபோ கதாநாயகி ஐஸ்வர்யா ராய் பங்கேற்காதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
ஐஸ்வர்யா ராய் வராததற்கு காரணம், அவருக்கு ஏற்பட்ட திடீர் காய்ச்சல்தானாம். நேற்று காலை கண்விழிக்கும் போதே ஐஸ்வர்யா ராய்க்கு கடுமையான காய்ச்சலாம். எந்திரன் தெலுங்கு பதிப்பின் இசை வெளியீடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமென்பதால் என்ன செய்வது என்றே புரியாமல் ஐஸ்வர்யா ராய் திகைத்தாராம்.
சமாளித்துக் கொண்டு ஐதரபாத் போய் விடலாம் என நினைத்தவரை, அவரது மாமியார் ஜெயா பச்சன் தான் தடுத்து நிறுத்தினாராம்.
எந்திரன் தெலுங்கு பதிப்பின் இசை வெளியீட்டில் கலந்து கொள்ளாததற்கு ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியோரிடம் தொலைபேசியில் மன்னிப்பு தெரிவித்தாராம் ஐஸ்வர்யா ராய்.
Want to write for Maniyosai?
Download our android app





