கோலிவுட்: சுந்தர்.சி ஒரு நல்ல சுயமரியாதைக் காரர் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சுந்தர்.சி. நடித்த 'நகரம் மறுபக்கம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று (செப்.4) சென்னை சத்யா திரையரங்கில் நடந்தது. இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு பாடல் சி.டியை வெளியிட, நடிகர் கமலஹாசன் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
நம்முடைய தம்பி சுந்தர் சி. பற்றி இங்கே சொன்னார்கள். அவர் அருணாசலம் படத்தில் பாடல் வரியிலே சேர்ப்பதற்கு லிங்கம் கிடைக்காத காரணத்தால், அண்டாவைக் கவிழ்த்து இதுதான் லிங்கம் என்று சொல்லி, படமெடுத்தார் என்று சொன்னார்கள். அண்டப் புளுகுகளையெல்லாம் கவிழ்த்து இதுதான் ஆண்டவன் என்று சொல்கின்ற காலத்தில், சுந்தர் சி. எவ்வளவு பெரிய சுயமரியாதைக்காரராக இருந்து அந்தப் படத்திலே பகுத்தறிவினை விதைத்திருக்கிறார் என்பதை எண்ணும்போது, இந்தப் படத்திலும் அது போன்ற பகுத்தறிவு துளிகளை எதிர்பார்க்கிறேன்.
கட்சி என்பது ஒரு லட்சியத்திற்காகத் தான் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு தான் குஷ்பு இந்தக் கட்சியிலே தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். ஆகவே இனி இவர்கள் இருவரும் சேர்ந்து இந்த இயக்கத்தின் கொள்கைகளை வளர்க்க வேண்டும், லட்சியங்களை வளர்க்க வேண்டும். குஷ்பு மாத்திரம் திமுகவில் சேர்ந்திருக்கிறார் என்றால் போதாது. சுந்தரும் குஷ்புவோடு திமுகவில் சேர்ந்திருக்கிறார் என்ற அளவிற்கு இந்தப் படத்திலே வெற்றிகரமாக பல நல்ல கருத்துக்களை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
Want to write for Maniyosai?
Download our android app





