இந்தியாவுக்கு குடியரசு கிடைத்து 60 ஆண்டுகள் ஆகி விட்டது. உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு நம்முடையதே என்பதில் நமக்கு ஏகப்பட்ட பெருமை. ஒவ்வொரு ஆண்டு குடியரசு தினத்தன்றும் ஏகப்பட்ட கொண்டாட்டம்தான்.
ஜனாதிபதி பார்வையிட முப்படைகளின் கம்பீர அணிவகுப்பு, பள்ளிக் குழந்தைகளின் கண் கவரும் கலை நிகழ்ச்சிகள் என்று ஒவ்வொரு இந்தியனும் சிலாகிக்கும் பொன்னான நாள் குடியரசு தினம்.
ஆனால், இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் பெயரளவுதான் கொண்டாடப் படுகின்றனவோ என்ற ஆதங்கமும் சில சமயம் எழதான் செய்கிறது. அப்படி நம் மனதில் எழும் எண்ணத்திற்கு முகாந்திரம் இல்லாமல் இல்லை.
ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் நிகழ்ச்சிகள் அன்றாட நம் நாட்டில் நடந்துதான் வருகின்றன. ஒரு சாதாரண இடைத் தேர்தலை கூட அமைதியாக நடத்தும் அளவு அமைதியான சூழ்நிலை நம் நாட்டில் நிலவவில்லை. தமிழ்நாட்டில் நடந்து வரும் இடைத்தேர்தல்களே ஜனநாயகத்தின் அழகை பறைசாற்றும் விதத்தில் உள்ளன. பிரியாணிக்கும், குவார்ட்டருக்கும், கொஞ்சம் காசுக்கும் மக்கள் ஓட்டு போட ஆரம்பித்து விட்டனர். அரசியல் கட்சிகள் கொஞ்சம் மனசாட்சியுடன் நடக்க முற்பட்டாலும், மக்களே ஓட்டு போட காசு கேட்கும் அவல நிலை உருவாகி விட்டது.
நாடாளுமன்ற தேர்தலில், எலக்ட்ரானிக் வாக்கு எந்திரங்களில் பெரும் அளவு முறைகேடு நடைபெற்றதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. அவர்களின் ஐயத்தை போக்க வேண்டிய கடமையுடைய தேர்தல் ஆணையமும், அலட்சியமாக ஏதோ பதில் சொல்லி தன் பொறுப்பை தட்டிக் கழித்து விட்டது.
ஜனநாயகம் இப்படி ஒரு பக்கம் பஞ்சர் ஆகிக் கொண்டிருக்க, தேசிய இறையாண்மை ஒரு பக்கம் ஐசியூவில் படுத்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு தனி நாடு போல் செயல் பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தண்ணீர் தர மறுக்கிறது. கேரளம் ஒரு பக்கம் நம்மை வம்புக்கிழுத்து வருகிறது.
ஆந்திரா கதை அதை விட மோசம். ஒரே மாநிலம் இரண்டாக பிளவு பட்டு நிற்கிறது. தெலுங்கானா விவகாரம் முற்றியுள்ள நிலையிலும் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருக்கின்றனர். ‘முதல்வன்' படத்தில் வருவது போல, கட்சிக் காரன் ஓட்டு, ஜாதிக் காரன் ஓட்டு என பலவற்றை கருத்தில் எடுத்துக் கொண்டு தீர்க்கமான முடிவை எடுக்காமல் மத்திய அரசு மவுனியாக உள்ளது.
மகாராஷ்டிராவில் பால் தாக்ரே, ராஜ் தாக்ரே வகையறாக்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது. டாக்சி ஓட்டுநர்கள் மராத்தி கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவர்களை மாநிலம் விட்டே விரட்டுவோம் என ராஜ் தாக்ரே பகிரங்கமாக மிரட்டி வருகிறான். இவனைப் போன்ற அரசியல் ரவுடிகளை எதுவும் செய்ய முடியாமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.
இந்தியாவுக்குள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வது இருக்கட்டும். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பொழுது போகாத போதெல்லாம் சுட்டு வருகின்றனர். அதனை தட்டிக் கேட்க இங்கு உள்ளவர்களுக்கும் சரி, மத்தியில் உள்ளவர்களுக்கும் சரி நேரம் இல்லை. இதையெல்லாம் பார்க்கும் போது இறையாண்மையாவது, கத்திரிக்காயாவது என்ற சலிப்பு எழக் கூடாது என்பதில் நியாயம் இல்லை.
இப்படி ஒவ்வொரு பக்கமும் ஜனநாயகமும், இறையாண்மையும் பந்தாடப் பட்டு வரும் போது, குடியரசு தினத்தை கொண்டாடுவதில் மனம் இடம் கொடுக்கவில்லை. இந்த அவலங்கள் தீரும் போது குடியரசு தினத்தை இன்னும் ஜோராக கொண்டாடுவோம்!
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|




