ஐபிஎல் கிரிக்கெட் ஒவ்வொரு ஆண்டும் சிலபல அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. சென்ற ஆண்டு, ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களும், அவர்களை ஏலம் எடுத்த நடிகைகளும் அடித்த கூத்துகளை, யாரோ ஒருவர் பிளாக்கில் எழுதி அமர்க்களப் படுத்தியது நினைவிருக்கலாம்.
இந்த ஆண்டு சசி தரூர் - ஐபிஎல் விவகாரம்.
ஐபிஎல் கிரிக்கெட் பொறுத்த வரை, அடிப்படையிலேயே அதை வெறுத்து புறம் தள்ள நிறைய காரணங்கள் உள்ளன. உண்மையான கிரிக்கெட் ரசிகனாக இருந்தால் ஐபிஎல்லை ஏற்றுக் கொள்ள தயங்குவான். முதலில், கிரிக்கெட் வீரர்களை ஆடு, மாடு போல் ஏலம் எடுப்பதே ஒரு அசிங்கம். அதிலும், இந்த ஆட்டக் காரரை வாங்க ஆளில்லை, அந்த ஆட்டக் காரரை சீண்டுவோர் இல்லை என செய்திகள் வருவது கேவலம். இந்த ஆண்டு, இந்த ஐபிஎல்லால், இந்தியா- பாக்கிஸ்தான் இடையே போரே வந்திருக்கும். யார் செய்த புண்ணியமோ, அப்படி எதுவும் நிகழவில்லை. பணத்துக்கு மயங்காத ஆட்டக் காரனாக இருந்தால், இந்த அசிங்கங்களுக்கு துணை போகக் கூடாது.
அதிலும், ஐபிஎல் கிரிக்கெட் அணிகளை ஏலம் எடுப்பவர்களின் லட்சணத்தை குறிப்பிட வேண்டும். ஷில்பா ஷெட்டி, ப்ரீத்தி ஜிந்தா போன்ற நடிகைகள், கிரிக்கெட் அணிகளை ஏலம் எடுக்கிறார்கள். ஏலம் எடுப்பது தவறு இல்லை. தங்கள் அணியின் விளம்பரத்திற்காகவும், தங்களின் விளம்பரத்திற்காகவும், அவர்கள் செய்யும் சில செயல்கள் அருவருக்கத் தக்கவை. நடிகர் ஷாருக் கானும் ஒரு அணியை ஏலம் எடுத்துள்ளார்.
'சக் தே இந்தியா' என்ற படத்தில் கடந்த ஆண்டு நடித்தார் ஷாருக் கான். அந்தப் படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட். படத்தின் கதை என்ன தெரியுமா? ஷாருக்கான் ஒரு ஹாக்கி வீரர். இந்திய அணியின் கேப்டன். பாக்கிஸ்தானுடனான, உலகக் கோப்பை இறுதி போட்டியில், இந்தியா தோற்க நேருகிறது. ஷாருக் கான் (கதைப்படி) முஸ்லிம் என்பதால், வேண்டுமென்றே பாக்கிஸ்தானுக்கு விட்டுக் கொடுத்து விட்டார் என பத்திரிகைகள் எழுதுகின்றன. நாடு முழுவதும் அவரை துரோகி என ஏசுகிறது. பெண்கள் ஹாக்கி அணியின் கோச் பதவியை ஒரு சவாலாக ஏற்றுக் கொள்கிறார். வெவ்வேறு மாநில பெண்களுக்கு இடையே இருக்கும் கருத்து வேற்றுமைகளை கலைய பாடுபடுகிறார் ஷாருக் கான். இந்திய பெண்கள் ஹாக்கி அணி, ஆஸ்திரேலியா செல்கிறது. அங்கு அமோகமாக விளையாடி, உலக சாம்பியனையே வீழ்த்தி கோப்பை வெல்கிறது இந்திய அணி. தன் மீது படிந்த கறையை துடைத்த பெருமையில் இந்தியா திரும்புகிறார் ஷாருக் கான்.
நம் தேசிய விளையாட்டான ஷாக்கியின் மேன்மையை விளக்கும் மகத்தான படம் 'சக் தே இந்தியா'. கிரிக்கெட்டுக்கு அளிக்கப் படும் முக்கியத்துவம் ஹாக்கிக்கு அளிக்கப் படுவது இல்லை என்பது இந்தப் படம் வெளிப்படுத்தும் ஆதங்கம்.
இந்த அருமையான படத்தில் நடித்த ஷாருக் கானே, கிரிக்கெட் அணியை பல கோடிகள் கொட்டி வாங்கியுள்ளார். இந்த ஐபிஎல் ரகளையில், இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள், மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்பது ஷாருக் கானுக்கும் தெரிந்திருக்கும். இந்த நடிகர்களெல்லாம் ஊருக்கு உபதேசம் செய்யும் கோமாளிகள் என்பதை நிரூபித்த நிகழ்வு இது.
இதெல்லாம் இருக்கட்டும். கிரிக்கெட் போட்டிகளாவது, கிரிக்கெட் விதிகளின் படி நடக்கிறதா? மட்டை ஆட்டக் காரர்கள், சிக்ஸர்களும், ஃபோர்களையும் அடித்தால்தான் மக்களுக்கு பொழுதுபோக்காக இருக்கும் என்பதற்காக, பவுண்டரி எல்லைகளை, வழக்கமான அளவை விட சுருக்கி விடுகிறார்கள். இதனால், பந்து வீச்சாளர்கள் பலிக்கடா ஆக்கப் படுகின்றனர். இதை, நாங்கள் மட்டும் எழுதவில்லை. மத்திய விளையாட்டு அமைச்சர் எம்.எஸ்.கில் அவர்களே, அண்மையில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்த சாக்கடை அசிங்கங்கள் போதாது என இப்பொழுது சசி தரூர் சர்ச்சை வேறு. ஐபிஎல் கொச்சி அணியில் ரூ 70 கோடி மதிப்பிலான பங்குகளை தன் தோழிக்கு வாங்கிக் கொடுத்து விட்டாராம் தரூர். 'என்ன அநியாயம்? இவ்வளவு பெரிய அக்கிரமம் நடப்பதா?' என எதிர்கட்சிகள் பஞ்சாயத்து கூட்ட, சசி தரூர் ராஜினாமா செய்து விட்டார். உண்மையில், அவரை ராஜினாமா செய்ய வைத்து விட்டது மத்திய அரசு.
சசி தரூர் ராஜினாமாவை எதிர்கட்சிகள் வரவேற்று வருகின்றன. 'யெஸ்.. நாங்கள்லாம் ரொம்ப நேர்மையானவங்கள்ல' என்று காங்கிரஸும் புலங்காகிதம் அடைந்து வருகிறது.
உண்மையை சொல்ல போனால், இந்த விவகாரத்தில் இழப்பு, பல்லாயிரம் கோடிகளை சம்பாதித்து வரும் ஐபிஎல்-க்கு மட்டுமே. மத்திய அரசுக்கு, வருமான வரி இழப்பை தவிர பெரிய இழப்பு இல்லை. அந்த இழப்பு கூட பொதுமக்களுக்கு இல்லை.
இந்த விவகாரத்தில், இருக்கும் வேலையையெல்லாம் விட்டு விட்டு, மத்திய அரசு பஞ்சாயத்து செய்து ஒரு 'நேர்மையான' முடிவை எடுத்துள்ளது. இதனால், மத்திய அரசு பவித்திரமாகி விட்டதை நினைத்து மட்டற்ற மகிழ்ச்சி.
ஆனால், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்வதில் 1 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக சொல்கிறார்கள். அது பற்றி, மத்திய அரசு பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஊழல் செய்ததாக கூறப்படும் அமைச்சர் சார்ந்த கட்சியின் தலைவரோ, 'அது முடிந்து போனக் கதை' என்று கரகரத்த குரலில் கூலாக சொல்கிறார்.
அது எப்படி முடிந்து போன கதை ஆனது? ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உண்மையை கண்டறிய மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது.
ஒரு லட்சம் கோடி ஊழல் செய்ததாக கூறப்படுபவர்களே ராஜா போல ஹாயாக இருக்கும் போது, 70 கோடிக்காக பதவி இழக்க நேரிட்ட சசி தரூரை நினைத்தால் பரிதாபப் படத்தான் தோன்றுகிறது!!!
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|




ஏன்யா மொட்டை மண்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடற?