சில சுயநலமிக்க மருத்துவ துறையினரின் சாயம், அண்மை காலமாக வெளுத்து வருகிறது. உயிரைக் காக்க வேண்டியவர்களே, பணத்துக்காக உயிரைக் கொல்லவும் துணிந்து விட்டனர்.
நாங்கள் முந்தைய தலையங்கத்தில் குறிப்பிட்டது போல், ஐபிஎல் ஆட்டங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதால் மக்களுக்கோ அரசுக்கோ நேரடி பாதிப்பு எதுவும் இல்லை. அது போல், நாடு முழுவதும் கையூட்டு பெறும் கலாசாரம் நிலவி வந்தாலும், அதனால், மக்களுக்கு உடனடி பாதிப்பு ஏற்படப் போவதில்லை.
ஆனால், மருத்துவ தொழில் என்பது அப்படி அல்ல. மக்களின் உயிருடன் நேரடி தொடர்புடையது மருத்துவ தொழில். அந்த உன்னதமான மருத்துவ தொழிலுக்கு இழுக்கு ஏற்படுவது போன்ற நிகழ்வுகள் சமீப காலமாக நடந்து வருவது துரதிருஷ்ட வசமானது.
பணத்துக்காகவும், பரிசுப் பொருட்களுக்காகவும் ஆசைப் பட்டு, உடலுக்கு ஆபத்தான மருந்துகளை, மருத்துவ பிரதிநிகளிடம் பெற்று, அவற்றை, முயலிடம் பரிசோதிப்பது போல, தங்களைத் தேடி வரும் சாமானிய மக்களுக்கு பரிந்துரைக்கும் வழக்கம் பெரும்பாலான மருத்துவர்களிடம் வெகு காலமாகவே நிலவி வருகிறது. இதைப் பற்றி சம்மந்தப் பட்ட அதிகாரிகளுக்கு தெரிந்தும், தனக்கு கப்பம் கட்டினால் போதும், யார் எக்கேடு கெட்டு போனால் என்ன என்று அலட்சியமாக இருந்து வந்தனர். திடீரென, தூக்கம் கலைந்தது போல், அங்கு சோதனை, இங்கு சோதனை ; மருத்துவர் கைது என்றெல்லாம் செய்திகள் வரும். 2 நாட்களில் எதுவும் நடக்காதது போல அமைதியாகி விடும்.
சாதாரண கிளினிக்குகள் இப்படி என்றால், பெரிய மருத்துவமனைகளைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. மருத்துவமனைக்கு கூரியர் கொடுக்க செல்பவனைக் கூட, மடக்கி பிடித்து, ஸ்கேன், எக்ஸ் ரே எடுத்து பணம் பிடுங்கிக் கொண்டு அனுப்பி விடுவார்கள்.
நிலைமை இவ்வாறு இருக்க, காலாவதி ஆன / போலி மருந்துகளின் புழக்கம் அதிகமாக இருப்பதாக அண்மையில் தெரிய வந்துள்ளது. திடீரென, இந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்திருப்பதற்கு அரசியல் ரீதியாக ஏதேனும் காரணம் உண்டா என தெரியவில்லை. இருந்தாலும், இந்த விவகாரத்தில், தாமதமாக நடவடிக்கையெடுத்தாலும், அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ள தமிழக அரசை பாராட்ட வேண்டும். தமிழக அரசின் இந்த கெடுபிடி காரணமாக, போலி மருந்துகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எந்த மருந்து வாங்கினாலும், பில் கேட்டு வாங்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு தற்போதுதான் வந்துள்ளது. 'அரசு விழிப்பாக உள்ளது. இனி, மக்களை ஏமாற்ற முடியாது' என்ற பயமும் மருந்து கடை நடத்துபவர்களிடம் வந்துள்ளது.
போலி மருந்து விவகாரம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஓய்வதற்குள், அடுத்த நிகழ்வு அதை விட அதிக அதிர்ச்சியை தருவதாக உள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவர் டாக்டர் கேத்தன் தேசாய், ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
லஞ்சம் எதற்காக வழங்கப் பட்டது?
மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் பெற வழங்கப் பட்டது.
கோடி கணக்கில் லஞ்சம் கொடுத்து மருத்துவ கல்லூரி ஆரம்பிக்க வேண்டிய அவசியம் என்ன? மக்கள் மீது இருக்கும் அன்பா?!?
மருத்துவ கல்லூரி தொடங்கினால்தான், மாணவர்களிடம் லட்சக் கணக்கில் பணம் கரக்க முடியும்.
லட்சக் கணக்கில் பணம் செலவழித்து ஒரு மாணவன் ஏன் படிக்க வேண்டும்? நாட்டுக்கு தொண்டாற்றவா?
இல்லை. பிற்காலத்தில், தனியாக கிளினிக் வைத்து, அவன் பங்குக்கு நோயாளிகளிடம் பணம் கரக்க, அவன் செய்யும் முதலீடுதான், மருத்துவக் கல்லூரியில் படிக்க அவன் செய்யும் செலவு.
ஆக மொத்தத்தில், ஒரு கேடி செய்யும் முறைகேட்டின் தீவிரம், பல தலைமுறைகளையே பாதிக்கும் அல்லவா? பணம் சம்பாதிப்பது ஒன்றே நோக்கம் என்றால், தேசாய் போன்றவர்கள் ஏன் மருத்துவ தொழிலுக்கு வர வேண்டும். பேசாமல், கையில் 4 செல்போன்களுடனும், மாருதி வேனுடனும், வேறு தொழில் செய்ய சென்று விடலாமே!!!
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



