நாடாளுமன்றத்தில் ஒரே அமளி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆரவாரம், கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள், அரசு அவசர பேச்சுவார்த்தை, பிரச்சினைக்கு ஒரே வாரத்தில் சுமூக தீர்வு... இவை அனைத்தும் ஏதோ மிகப் பெரிய தேசிய பிரச்சினைக்காக நடக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வுக்காகதான் இத்தனை கலாட்டாவும்!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.16,000 மட்டுமே அடிப்படை சம்பளமாக இருந்து வந்தது. இதை வைத்து வண்டிக்கு எப்படி பெட்ரோல் போடுவது, குழந்தைகளின் பள்ளிக்கூட கட்டணத்தை எப்படி கட்டுவது, சமையல் எரிவாயு எப்படி வாங்குவது என வழி தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர் ஏழை நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை ரூ.80,000 ஆக உயர்த்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டு குழு அரசுக்கு பரிந்துரை செய்தது. ரூ.50,000 ஆக அடிப்படை சம்பளத்தை உயர்த்த மத்திய அமைச்சரவையும் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. எம்.பி.க்களுக்கு வந்ததே கோபம். நாடாளுமன்றத்தில் ஏகப்பட்ட ஆரவாரம், அமளியில் ஈடுபட்டனர். அதிருப்தி அடைந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதங்கத்தை அரசு கவனத்தில் கொள்ளும் என நிதியமைச்சர் பிரணாப் உறுதியளித்தார். கடைசியில், எம்.பி.க்களுக்கான அலுவலக நிர்வாக தொகையும், தொகுதி நிதியும் உயர்த்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது அனைத்து படிகளையும் சேர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாத வருமானம் ரூ.1.4 லட்சம்.
எம்.பி. தேர்தலில் சீட் கிடைத்து, தேர்தல் செலவுகளை சமாளித்து, ஒருவர் எம்.பி. ஆக வேண்டுமென்றால் அதற்கான அடிப்படை தகுதியே கோடீஸ்வரராக இருப்பதுதான். தப்பி தவறி கோடீஸ்வரர் அல்லாத ஒருவர் எம்.பி.ஆகவோ, அமைச்சர் ஆகவோ ஆகி விட்டால், 5 ஆண்டுகளில் நிச்சயம் கோடீஸ்வரர் ஆகி விடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. தன் பதவியை வைத்து பல ஆதாயங்களை அடைந்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நியாயமாக பார்த்தால் சம்பளமே கொடுக்க கூடாது. கெளரவ பதவிகளுக்கு அளிக்கப் படுவது போல பெயருக்காக ஒரு தொகை அளிக்கப் பட வேண்டும். அப்படியிருக்க இவர்களுக்கு 300 சதவீதத்திற்கும் மேல் சம்பள உயர்வு அளிக்கப் பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பல அரசு துறைகளில் பணிபுரிபவர்களும் தங்கள் ஊதிய உயர்வுக்காக வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் என பல போராட்டங்கள் நடத்த வேண்டியுள்ளது. முதல் கட்ட பேச்சுவார்த்தை, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை என கட்டம் கட்டமாக அவர்களை கட்டம் கட்டி, கடைசியில் ‘இந்தா பிடிச்சுக்கோ’ என பிச்சை போடுவது போல மிக சொற்ப ஊதிய உயர்வு அளிக்கப் படுவது நிதர்சனமான உண்மை.அரசு ஊழியர்களுக்கே இந்த லட்சணம் என்றால், தனியார் ஊழியர்களின் கதி கேட்க வேண்டியதில்லை. பல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை கொத்தடிமைகள் போல் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்கள் எந்த மனித வள மேம்பாட்டு கொள்கைகளையும் கடைபிடிப்பதில்லை. பெரும்பாலும், அரசியல் செல்வாக்கு உடையவர்களே தொழில்களை நடத்த முடியும் என்ற நிலை இருப்பதால், அரசுகளும் இந்த தனியார் நிறுவங்களை கண்டு கொள்வதில்லை.
அப்படியிருக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவதால், ஒரே வாரத்தில், ஒப்புக் கொண்ட ஊதியத்தை மேலும் உயர்த்துவதை பார்க்கும் போது, ‘அமளியில் ஈடுபட்டு, எதிர்கட்சிகள் தலைவலி கொடுக்காமல் இருந்தால் சரி. அவர்கள் கேட்டதை கொடுத்து தொலைப்போம்.’ என தன் தலையை காப்பாற்றிக் கொள்ள அரசு நினைக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.
மாவோயிஸ்டுகள் பிரச்சினை, விலைவாசி பிரச்சினை என மக்கள் நல பிரச்சினைகளை பல ஆண்டுகள் ஆகியும் தீர்க்க துப்பு இல்லாத மத்திய அரசும்,அவற்றை எதிர்த்து குரல் கொடுக்க திராணி இல்லாத எதிர்கட்சிகளும், தங்கள் ஊதிய பிரச்சினையை மட்டும் குறுகிய காலத்திலேயே தீர்த்துக் கொண்டுள்ளனர். இந்தப் பணம் அவர்களுக்கு ஒட்டுமா?!?!
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



