60 ஆண்டுகளாக நடந்துக் கொண்டிருந்த அயோத்தியா வழக்கின் தீர்ப்பு வெளிவந்து விட்டது. அயோத்தியாவில் இருக்கும் சர்ச்சைக்குரிய நிலத்தில் மூன்றில் இரண்டு பங்கை இந்துக்களுக்கும், ஒரு பங்கை முஸ்லிம்களுக்கும் கொடுக்க வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக இரண்டு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். இருந்தாலும்,
இந்த தீர்ப்பை இரண்டு தரப்பினரும் மிகுந்த மன பக்குவத்துடனும், மன முதிர்ச்சியிடனும் அணுகியுள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.
மத்திய அரசுகளும், மாநில அரசுகளும் எடுத்திருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகவும், இரு தரப்பினரின் அணுகுமுறை காரணமாகவும், தீர்ப்பையடுத்து எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை.
நாட்டு மக்களின் மனநிலையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம், ஒரு பக்கத்தில் மகிழ்ச்சியை தந்தாலும், அரசியல் ஆதாயத்திற்காக, மக்களை தூண்டும் சில அரசியல்வாதிகளின் அறிக்கைகள் மிகவும் கவலை அளிக்கிறது.
முலாயம் சிங் யாதவ், இந்த தீர்ப்பால் முஸ்லிம் மக்கள் ஏமாற்றப் பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அரசியல் ஆதாயத்தை தேட முயலும் அவரின் இந்தக் கருத்துக்கு முஸ்லிம் தலைவர்களே கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நம் தமிழ்நாட்டில், தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும், ஒரு சாராரை தூண்டும் வகையிலும் சில தலைவர்கள் அறிக்கை விடுத்து வருகின்றனர்.
"அத்வானி, சோ போன்ற இந்துத்துவ சக்திகளின் வாதத்தையே, நீதிமன்றம் தன் தீர்ப்பாக கூறியுள்ளது. முஸ்லிம் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப் பட்டு வருகின்றனர். இதை எதிர்த்து அவர்கள் போராட வேண்டும். அவர்களுக்கு எங்கள் கட்சி துணை நிற்கும்." என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை விட்டுள்ளார். 'சர்ச்சைக்குரிய நிலத்தில், தொல்பொருள் ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும்.' , 'ராமர் பிறந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை.' என தீர்ப்பு வெளிவந்து 5 நாட்களில் முன்னுக்கு பின் முரணாக அரை டஜன் அறிக்கைகளை வெளியிட்டு விட்டார் திருமாவளவன்.
தீர்ப்பு வெளிவந்தவுடன் வன்முறை வெடிக்கும். அதை வைத்து குளிர் காயலாம் என்று திருமாவளவன் நினைத்திருபார் போலும். அவர் நினைத்ததற்கு மாறாக அமைதி நிலவுவதைப் பார்த்து அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே கருதத் தோன்றுகிறது. அதனால், தினமும் சம்மந்தமில்லாமல் அறிக்கைகள் விட்டும், பொது மேடைகளில் பேசியும் வருகிறார்.
திருமாவளவன் போன்ற வகையறாக்கள் பேசினால் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் கருணாநிதி வெளியிட்டிருக்கும் அறிக்கை அதற்கும் மேல்!
"17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமர் பிறந்ததாக கருதப் படுகிறது. அதனை நீதிமன்றமும் உறுதி படுத்தியுள்ளது. திராவிட இனத்தைப் புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரீகம், அடிப்படை ஆதாரம் இல்லாமலேயே வெறும் மூட நம்பிக்கையையை மக்களிடம் வளர்ப்பதில் மட்டும் முனைப்பாக செயல்பட்டிருக்கிறது." இவ்வாறு கருணாநிதி கூறுகிறார்.
ஆரியம், திராவிடம், இந்து, முஸ்லிம், தமிழ், தெலுங்கு, கறுப்பு, சிவப்பு ஆகிய பாகுபாடெல்லாம் நீதிமன்றங்களுக்கு கிடையாது என்பதை சாமானியமான மக்கள் நம்புகின்றனரோ இல்லையோ, மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் ஒரு முதலமைச்சர் நம்பவேண்டும்.
நீதிமன்றம் தவறான தீர்ப்பு அளித்து விட்டது என நேரடியாக சொல்ல கூச்சப் பட்டு, ஆரியம், திராவிடம், ராஜராஜ சோழன் என்றெல்லாம் சுற்றி வளைத்து அறிக்கை விட்டுள்ளார் கருணாநிதி.
ஒரு முதலமைச்சராக இருந்துக் கொண்டு கருணாநிதி இவ்வாறு பேசலாமா? அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் ஆகாதா? மக்களின் தலைவனே நீதிமன்றத்தை மதிக்காத போது, மக்களுக்கு எப்படி நீதிமன்றங்களை மதிக்க தோன்றும்? அமைதி காக்கும் படி பிரதமர், காங். தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் என பலரும் கோரிக்கை விடுத்திருக்கும் போது, நீதிமன்ற தீர்ப்பை அறிக்கை மூலம் கருணாநிதி விமர்சிப்பது, மக்களை தூண்டுவதற்காகதான் என ஏன் கருதக் கூடாது?
எஸ்.எம்.எஸ்.களை தடை செய்யும் மத்திய அரசு, நீதிமன்ற தீர்ப்பு பற்றி அரசியல்வாதிகள் அறிக்கைகள் வெளியிடவும் தடை விதித்திருக்க வேண்டும்.
பழைய பகை உணர்வை மறந்து, சம்மந்தப் பட்ட பிரிவினரே அமைதியாக பக்குவத்துடன் இருக்கும் போது, அவர்களை தூண்டுவது அரசியல்வாதிகளுக்கு அழகல்ல.
அயோத்தியா பிரச்சினையை தங்கள் ஆதாயத்திற்காக பயன்படுத்த முயன்றால், யாருக்கு ஆதரவு தெரிவிப்பது போல் பாசங்கு செய்து வருகிறார்களோ, அவர்களே காரித் துப்பி விடுவார்கள் என்பதை அரசியல் விஷமிகள் உணர வேண்டும்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




