உள்ளாட்சி தேர்தலில் மண்ணை கவ்வியதால் விரக்தியின் விளிம்பில் இருக்கும் எதிர்கட்சிகளுக்கு 'வெறும் வாய்க்கு அவல்' கிடைத்து விட்டது. இதனை வைத்து அரசியல் செய்து இன்னும் கொஞ்ச நாட்களுக்கு குளிர்காய்ந்து விடுவார்கள்!
கடந்த திமுக ஆட்சியில் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப் பட்டது. இங்கு கண்பார்வையற்றார்க்கான பிரெயில் நூல்களுக்கு ஒரு தளம், குழந்தைகளுக்கான நூல்களுக்கு ஒரு தளம் என பல்வேறு வகையான நூல்களுக்கு ஒன்பது தளங்கள் உள்ளன.
இந்த பிரம்மாண்ட நூலகத்தை சுற்றுலா தளம் போல வேடிக்கை பார்க்கவும், கொஞ்சம் படிக்கவும் நாளொன்றுக்கு 1500 பேர் வருகை தருகின்றனர்.
எட்டு ஏக்கர் நிலபரப்பில் அமைந்துள்ள இந்த நூலகத்தை, நுங்கையில் உள்ள டி.பி.ஐ. வளாகத்திற்கு மாற்ற முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், நூலகம் தற்போது இயங்கி வரும் இடத்தில் குழந்தைகள் நல மருத்துவமனை உருவாக்கப் படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் உருவாக்கப் பட்ட கட்டிடம் என்பதாலேயே, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முதல்வர் இந்த முடிவை எடுத்திருப்பதாக சிலர் பரப்புரை செய்து வருகின்றனர்.
இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டு சில மணி நேரங்களிலேயே தமிழ் எழுத்தாளர்கள் சிலர் இணையதளம் வாயிலாக தனது புலம்பல்களை ஆரம்பித்து விட்டனர்.
ஜெயலலிதாவின் இந்த உத்தரவில் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம். ஆனால், இதனை எதிர்ப்பவர்களும் அதே அரசியல் உள்நோக்கத்தோடுதான் செய்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.
உயர்கல்வித் துறை வளாகத்தில் அறிவுசார் பூங்கா அமைக்கப் போவதாகவும், அங்கு பள்ளிக் குழந்தைகளுக்கான அறிவுசார் பட்டறைகள், விளையாட்டு வளாகம், கல்வி தொலைக்காட்சிக்கான படப்பதிவு நடுவம் உள்ளிட்ட பல வசதிகள் செய்யப் படப் போவதாகவும்; அதன் காரணமாக அந்த வளாகத்திலேயே அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்தால் பொருத்தமாக இருக்கும் என அரசு கருதுவதாகவும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். அவரது இந்த வாதத்தில், கொள்கைரீதியில் எந்த முரண்பாடும் இருப்பதாக தெரியவில்லை.
மேலும், தற்போது எழும்பூரில் அமைந்துள்ள குழந்தைகள் நல மருத்துவமனை, வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கும், நாள்தோறும் புதிது புதிதாக தோன்றும் நோய்நொடிகளுக்கும் ஈடுகொடுக்க கூடியதாக இல்லை என்பதால் புதிதாக குழந்தைகள் நல மருத்துவமனை உருவாக்கப் பட வேண்டும் என்ற அரசின் எண்ணத்தில் தவறு இருப்பதாக கருத முடியாது.
மேற்கு வங்க மாநில அரசு மருத்துவமனையில் குழந்தைகள் தொடர்ந்து மாய்ந்து வருவது குறித்த செய்தி அண்மையில் ஏடுகளில் வெளிவந்தன. அத்தகைய இழிநிலையில் இல்லாமல், மருத்துவ துறையில் தமிழகம் முதன்மை வகிக்க வேண்டும் என்று ஒரு அரசு நினைத்தால் அதில் குற்றம் சொல்வதில் நியாயம் இல்லையே.
நூலகத்தை பொருத்த வரை, புத்தக ஆர்வலர்கள் நூல்கள் எங்கிருந்தாலும் தேடிப் பிடித்து படிக்கப் போகின்றனர். நூலகம் கோட்டூர்புரத்தில் இருந்தால் என்ன; நுங்கம்பாக்கத்தில் இருந்தால் என்ன?
மேலும், கிடைத்ததே சாக்கு என அரசுக்கு எதிராக லாவணி பாடி இணையத்தில் சல்லி அடிக்கும் எழுத்தாளர்கள் தாங்களும் இந்த சமுதாயத்தின் அங்கம் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். தங்களை தனித் தீவாக அவர்கள் பாவித்து மாய உலகில் சஞ்சரிக்கக் கூடாது. மருத்துவமனை உருவாக்கப் பட வேண்டும் என்பதனை எந்த எழுத்தாளனும் எதிர்க்க மாட்டான். அப்படி எதிர்த்தால் அவன் உண்மையான எழுத்தாளனாகவே இருக்க மாட்டான்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




