ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக தளங்களில் வெளியிடப் படும் கருத்துக்கள் தணிக்கை செய்யப் பட வேண்டும் என்று மத்திய தொலைதொடர்பு அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார். இத்தகைய இணையதளங்களில் தனி மனித தாக்குதல்கள் மிக அதிகமாக இருப்பதாக அமைச்சர் கருதுவதில் தவறில்லை. ஆனால், பொதுமக்களின் கருத்துக்களை தாங்கிச் செல்லும் இந்த இணையதளங்களை கண்காணிப்பதோ, அதில் வெளியாகும் இடுகைகளை வடிகட்டுவதோ எந்த அளவு சாத்தியம் என தெரியவில்லை.
நம் அண்டை நாடுகளான சீனாவில் இணையதளங்களுக்கு மிக அதிகமாக கட்டுப்பாடு உள்ளது. பாக்கிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளிலும் அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட்டு விடக் கூடும் என்பதால் சமூக இணையதளங்கள் மீது சந்தேக பார்வை இருந்து கொண்டு இருக்கின்றன.
இந்தியாவை பொருத்த வரை மக்களின் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பு கொடுக்கும் வகையில் இணையதளங்கள் மீது அவ்வளவாக கட்டுப்பாடு இல்லை. இதனால் அன்றாட அரசியல் நிகழ்வுகளை இணையதளத்தை உபயோகிப்போர் அலசி ஆராயும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு விஷயத்திலும் சாமானியர்களுக்கு கூட அதிக அளவிலான விழிப்புணர்வும், மனத் தெளிவும் ஏற்பட இயல்கிறது.
ஊழலுக்கு எதிரான சமீபத்திய போராட்டங்களில் கூட சமூக இணையதளங்கள் அசாத்திய பங்கு வகித்து வருகிறது. அண்ணா ஹசாரேவை பட்டித்தொட்டியெங்கும் பிரபலப் படுத்தியது இணையதளங்கள்தான்.
மக்களின் இத்தகைய விழிப்புணர்வு குறுகிய கால அரசியல் ஆதாயம் தேட நினைப்போருக்கு வேண்டுமென்றால் பாதகமாக அமையலாமே தவிர இந்தியா போன்ற நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்க இன்றியமையாததாகும்.
இணையதளங்களாகட்டும், அச்சு, ஒலி/ஒளி ஊடகங்களாகட்டும் கருத்து சுதந்திரத்திற்கு எந்த முட்டுக்கட்டையும் எந்த கட்டத்திலும் இருக்கக் கூடாது. அவ்வாறு இடைஞ்சல் இருந்தால் அது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து விடக் கூடும்.
Want to write for Maniyosai?
Download our android app
| Next > |
|---|





