உலகெங்கும் வாழும் தமிழ் இனத்தவருக்கு புதிய நம்பிக்கையை கொடுக்கும் ஒரு தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு.
இலங்கை தமிழர்களைக் கொன்று குவித்தவர்களை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க ஐக்கிய நாட்டு சபையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், இலங்கை மீது மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வரவேற்றிருப்பது வரவேற்கத் தக்கதாகும்.
விடுதலை புலிகள் மீதுள்ள வெறுப்பு காரணமாகவும், காங்கிரஸுடன் நெருக்கம் வளர்க்க வேண்டும் என்ற ஆவல் காரணமாகவும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்து வந்த போரை ஒரு காலத்தில் ஜெயலலிதா அசட்டை செய்து வந்தார். போர் என்று ஒன்று நடந்தால், மக்கள் சாவது இயல்புதானே என்ற தத்துவத்தை உதிர்த்து இன பற்று உடையவர்களின் அதிருப்திக்கு ஆளானவர் இன்றைய முதல்வர் ஜெயலலிதா.
ஆனால், காலப்போக்கில் இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப் பட்ட கொடூரத்தை உணர்ந்தவராகவே காணப்படுகிறார் ஜெயலலிதா. அதன் பிரதிபலிப்பாகவே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே அவர் நிறைவேற்றியுள்ளார்.
தீர்மானத்தின் போது நடந்த விவாதத்தின் போது பேசிய முதல்வர் ஜெயலலிதா, இலங்கை தமிழர் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி துரோகம் செய்ததாக குற்றம்சாட்டினார். மனித சங்கிலி நடத்தியது, பிரதமருக்கு கடிதங்கள் எழுதி காலத்தை வீணடித்தது, அரை நாள் உண்ணாவிரதம் நடத்தியது போன்ற கருணாநிதியின் துரோகங்களை சட்டசபையில் பதிவு செய்துள்ளார் ஜெயலலிதா.
இலங்கை தமிழர்கள் மீதான ஜெயலலிதாவின் கரிசனம், கருணாநிதி மீதான காழ்ப்புணர்ச்சியின் பிரதிபலிப்பாக இல்லாமல், நிரந்தர தீர்வு காணப் படுவதற்கான ஒரு முயற்சியின் தொடக்கமாக இருக்க வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நாளை, ஒரு வேளை காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணி அமைக்க வேண்டிய சூழ்நிலை அதிமுகவுக்கு ஏற்பட்டாலும், இலங்கை தமிழர் மீதான அக்கறை தொடர வேண்டும். அரசியல் லாபத்துக்காக விட்டுக் கொடுத்து விடக் கூடாது.
தன் சொந்த காரணங்களுக்காக ஒட்டுமொத்தமாக ஒரு இனமே அழிய காரணியாக இருந்த காங்கிரஸ் தலைமைக்கும், தன் மக்கள் நலனுக்காக, தமிழர்களுக்கு எதிராக பயங்கரங்கள் அரங்கேற்றப் பட்டதற்கு உடந்தையாக இருந்த திமுகவுக்கும் இந்தத் தேர்தலில் தமிழக மக்கள் ஒரு மறக்க முடியாத பாடத்தைக் கற்பித்து விட்டனர். இந்த பாடத்தை பார்த்து, இலங்கை தமிழர்களைக் காக்கும் தன் கடமையில் இருந்து எக்காரணம் கொண்டும் பிறழாமல் இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு தன் நலனுக்காக தமிழர் நலத்தை காவுக் கொடுத்தால் என்ன ஆகும் என்றும் இன்றைய தமிழக ஆட்சியாளர்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் என நம்பலாம்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





