கோல்கத்தா: மேற்குவங்க மாநில தலைநகர் கோல்கத்தாவில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (டிச.9) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 89 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிகழ்வுக்கு பொறுப்பேற்று அந்த மருத்துவமனையின் உரிமையாளர்கள் காவல்துறையில் சரணடைந்துள்ளனர்.
தெற்கு கோல்கத்தாவின் தகூரியா பகுதியில் ஆம்ரி தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இதன் கட்டிடத்தின் அடிதளத்தில் சேகரிக்கப் பட்டிருந்த வேதிப் பொருள் மூலமாக இன்று (டிச.9) அதிகாலை 3.15 மணியளவில் தீ பிடித்தது. சில நிமிடங்களிலேயே தீ மளமளவென பரவியது.
நிகழ்வு நடந்தது அதிகாலை நேரம் என்பதாலும், பெரும்பாலானோர் தப்பிக்க கூடிய சூழலில் இல்லாத நோயாளிகள் என்பதாலும் மருத்துவமனையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். மருத்துவமனையின் அனைத்து வாயிற்கதவுகளும், ஜன்னல்களும் மூடப் பட்டிருந்தால் புகை மூட்டத்தில் சிக்கி பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பலர் தூக்கத்திலேயே இறந்து விட்டனர்.
தீ விபத்து நடந்து 2 மணி நேரம் பிறகே நிகழ்விடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் வந்ததாக குற்றம்சாட்டப் பட்டுள்ளது. ஆனால், ஆம்ரி மருத்துவமனை குறுகலான சந்தில் அமைந்திருப்பதால் அதனை அடைய சிக்கலாக இருந்ததாக தீயணைப்பு துறை கூறியுள்ளது.
தீயணைப்பு துறையினரின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு காலை 7.30 மணியளவில்தான் தீ கட்டுக்குள் கொண்டு வரப் பட்டது.
இதற்கிடையே, நிகழ்வு நடந்த ஆம்ரி மருத்துவமனையை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, இந்த கொடூர நிகழ்வு மன்னிக்க முடியாத குற்றம் என்றார். இந்த நிகழ்வு குறித்து நீதி விசாரணைக்கு ஆணையிடப் பட்டுள்ளதாகவும், நிகழ்வுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப் படுவார்கள் என்றும் அவர் கூறினார். மேலும், ஆம்ரி மருத்துவமனையின் உரிமம் நிறுத்தி வைக்கப் பட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
ஆம்ரி மருத்துவமனையின் ஊழியர்களின் அசிரத்தையால்தான் இந்த நிகழ்வு நடந்ததாக கூறி நோயாளிகளின் உறவினர்கள் இன்று காலை மருத்துவமனையை சூறையாடினர்.
Want to write for Maniyosai?
Download our android app

