புனே : மகாராஷ்டிரா அரசு போக்குவரத்து கழக பேருந்து இன்று காலை (ஜன.25) சுமார் 25 கி.மீ., தூரம் தவறான பாதையில் பயணித்து எதிரில் வந்த வாகனங்களை இடித்து தள்ளியது. இந்த கொடூர நிகழ்வில் 9 பேர் பலியாகியுள்ளனர்; 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
புனே நகரின், ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (ஜன.25) காலை 8.15 மணிக்கு மாநில போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்து புறப்பட்டது. இந்தப் பேருந்தை சந்தோஷ் மானே (30) என்ற ஓட்டுனர் ஓட்டினார். பேருந்தில் பயணிகள் யாரும் இல்லை.
திடீரென, பேருந்து பரபரப்பான புனே - சோலாபூர் சாலையில் தவறான பாதையில் பயணிக்க ஆரம்பித்தது. இதனால் அந்த சாலையில் சென்றுக் கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தவர்கள் அச்சத்துடன் சிதறி ஓடினர்.
பேருந்தை நிறுத்தும் படி சாலையில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் ஓட்டுனர் சந்தோஷ் மானே பேருந்தை ஓட்டிக் கொண்டே இருந்தார்.
ஆங்கில படங்களில் வருவது போல, பேருந்தை போலீஸார் துரத்திச் சென்றனர். ஒரு கட்டத்தில் துப்பாக்கியால் சுட்டு பேருந்தை நிறுத்தினர்.
நீலாயம் திரையரங்கிற்கு அருகில் பேருந்து நிறுத்தப் பட்டு, சந்தோஷ் மானே கைது செய்யப் பட்டார்.
இந்த நிகழ்வில், பேருந்தில் சிக்கி 9 பேர் பலியானார்கள்; 27 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த நிகழ்வு நடந்ததையடுத்து, புனே மாநகர மேயர் மோகன்சிங் ராஜ்பால் நிகழ்விடத்திற்கு விரைந்து, கொந்தளிப்புடன் காணப்பட்ட மக்களை சமாதானப் படுத்தினார்.
இந்த கொலை வெறி செயலில் ஈடுபட்ட ஓட்டுனர் சந்தோஷ் மானே, மன நோயால் பாதிக்கப் பட்டுள்ளாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சந்தோஷ் மானே, நேற்றிரவு 7.30 மணி வரை வேலை பார்த்து விட்டு வீட்டுக்கு சென்றதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தீவிரவாதிகளின் சதிச்செயலாக இருக்க வாய்ப்பில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Want to write for Maniyosai?
Download our android app

