சென்னை: தான் கொடநாடு செல்லும் போதெல்லாம் ஓய்வெடுக்க செல்வதாக பத்திரிகைகள் எழுதுகின்றன. கொடநாடு தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ளது. ஊட்டியில் இருப்பவர்களெல்லாம், வேலை வெட்டி எதுவுமின்றி எப்பொழுதும் ஓய்வு எடுத்துக் கொண்டுள்ளனர் என்று அர்த்தம் ஆகுமா என்று அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா வினவியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஜூன் 14) வெளியிட்டுள்ள அறிக்கை:
நான் கொடநாடு சென்றாலே, “ஒய்வெடுக்க செல்கிறேன்” என்று பத்திரிகைகள் தவறாமல் செய்தியை வெளியிடுகின்றன. கொடநாடு தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ளது. நீலகிரி மாவட்டமே குளிர்ந்த பிரதேசம் தான். அப்படியென்றால், இங்கே இருப்பவர்கள் யாரும் எந்த வேலையும் செய்யாமல் சதா சர்வ காலமும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாமா?
நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இருக்கிறார். காவல் துறை கண்காணிப்பாளர் இருக்கிறார். நீலகிரி மாவட்டத்தில் எத்தனையோ அரசு அலுவலகங்கள் இருக்கின்றன. அப்படியானால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அத்தனை பேரும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆகுமா? நீலகிரி என்றாலே ஓய்வு என்று அர்த்தமா? ஆக, நான் ஓய்வெடுக்க கோடநாட்டிற்கு வரவில்லை. சதா சர்வ காலமும் கட்சிப் பணியையும், மக்கள் பணியையும் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.
நீலகிரி மாவட்டம் முழுவதும் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அங்கு ஏராளமான பணியாளர்கள், குறிப்பாக பெண்கள் தினமும் காலை முதல் மாலை வரை தேயிலை பறிக்கின்றார்கள். குளிர்ந்த மலைப் பிரதேசத்தில் அவர்கள் வாழ்வதாலேயே, அவர்கள் சதா சர்வ காலமும் ஓய்வெடுக்கிறார்கள் என்று அர்த்தமா? அப்படி கூறுவது அபத்தமாகாதா? அது போலத்தான் கொடநாட்டில் நான் தங்கினால், நான் ஓய்வெடுத்துக் கொண்டு இருப்பேன் என்று சொல்லுவது அபத்தமான கூற்றாகும்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்தையில் கூறியுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app





