புதுதில்லி: பத்மஸ்ரீ கமலஹாசன் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில் ’கமலஹாசன் திரைப்பட விழா’ ஜூலை 2ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு தில்லியில் கொண்டாடப் பட இருக்கிறது.
1960ம் ஆண்டு வெளிவந்த களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் கமலஹாசன். குழந்தை பருவம் முடிந்து இளைஞன் ஆன பிறகு இவர் சில காலம் நடன இயக்குனராக இருந்தார்.
எம்ஜிஆர், சிவாஜி ஆகிய திரையுலக ஜாம்பவான்களுக்கு நடனங்களை அமைத்துள்ளார் கமலஹாசன். அபூர்வ ராகங்கள் படம் நடிகராக கமலஹாசனுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. பின்னர், மூன்றாம் பிறை (1982), நாயகன் (1987), தேவர் மகன் (1992), மகாநதி (1993) போன்ற தரமான படங்களில் நடித்து இந்திய அளவில் ஒரு சிறந்த நடிகர் என்ற மதிப்பை பெற்றார் கமலஹாசன். இவர் அண்மையில் நடித்த அன்பே சிவம், தசாவதாரம் ஆகிய படங்களும் கமலுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தன.
56 வயதான கமலஹாசன் திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகி விட்டன. இதனைக் கொண்டாடும் வகையில் கமலஹாசன் திரைவிழா என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்று புதுதில்லியில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. ஜூலை 2 முதல் நடக்கும் இந்த 3 நாள் நிகழ்ச்சியை, தகவல் மற்றும் ஒலிப்பரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த திரை விழாவில், கமலஹாசன் நடித்த ’ஹே ராம்’ (இந்தி பதிப்பு) , ‘அன்பே சிவம்’ , ‘விருமாண்டி’ , ‘தேவர் மகன்’ , ‘நாயகன்’ , ‘தசாவதாரம்’ , ‘சாகர சங்கமம்’ (தெலுங்கு - தமிழில் சலங்கை ஒலி) ஆகிய படங்கள் திரையிடப் படவுள்ளன.
Want to write for Maniyosai?
Download our android app



