புதுதில்லி: அரசு உதவி பெறும் மசூதிகளின் இமாம்களுக்கு மத்திய அரசு சம்பளம் கொடுக்க வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ் உள்ளிட்ட சில தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கையை, மக்களவையில்,ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
பின்னர், செய்தியாளர்களிடம் இது குறித்து பேசிய லாலு, “காங்கிரஸ் வாக்கு அரசியலை நடத்தி வருகிறது. சிறுபான்மையினரின் வாக்குகள் மட்டும் காங்கிரஸுக்கு தேவை. ஆனால், சிறுபான்மையினரின் நலனுக்கு காங்கிரஸ் எதுவும் செய்ததில்லை.
அரசு உதவி பெறும் மசூதிகளின் இமாம்களுக்கு மத்திய அரசு சம்பளம் கொடுப்பது பற்றி 6 மாத காலத்திற்குள் சட்டம் இயற்றப் பட வேண்டும் என 1993ம் ஆண்டே உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. 17 ஆண்டுகள் ஆகியும் இதைப் பற்றி மத்திய அரசு கண்டுக் கொள்ளவில்லை.” எனக் கூறினார்.
காங். பதிலடி:
லாலுவின் இந்தக் கோரிக்கைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி கூறுகையில்,
”தேர்தல் நெருங்கி விட்டதால் இமாம்களின் சம்பள பிரச்சினையை லாலு கையில் எடுத்துள்ளார். லாலு மீது எங்களுக்கு மதிப்பு உள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் அவர் அமைச்சராக இருந்த போது ஏன் இந்த பிரச்சினையை அவர் எழுப்பவில்லை.”என்றார்.
Want to write for Maniyosai?
Download our android app




