சண்டிகர்: இளம் விளையாட்டு வீராங்கனை மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் டி.ஜி.பி ரத்தோருக்கு இன்று கத்தி குத்து விழுந்ததால் வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.
அரியானா மாநில முன்னாள் டி.ஜி.பி., ரத்தோர், இளம் டென்னிஸ் வீராங்கனை ருச்சிகாவை மானபங்கப்படுத்தி அவரதுக் குடும்பத்தாருக்கும் தொடர்ந்துத் தொல்லைக் கொடுத்து வந்ததால், அவமானம் தாங்காமல் ருச்சிகா மூன்றாண்டுகளுக்கு பின் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரத்தோருக்கு ஆறு மாத சிறை தண்டனை அளிக்கப்பட்டது.
ஆனால் இந்த தண்டனைப் போதாதென ருசிகாவின் தோழியும், பொது மக்களும் புதிதாக வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த புது வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி, சண்டிகார் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார் ரத்தோர். மேலும் சில வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டியும் மனுத் தாக்கல். இந்த மனுமீதான விசாரணை இன்று (08/02/2010) நடக்கவிருந்தது.
அப்பொழுது உணவு இடைவேளையின் போது கோர்ட்டுக்கு வந்த ரத்தோர் காரிலிருந்து இறங்கி கோர்ட்டுக்கு செல்லும் வழியில் ஒரு இளைஞன் திடீரென அவர் மீதுப் பாய்ந்து கத்தியால் குத்தினான். இதனால் கோர்ட் வளாகத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. உணவு இடைவேளை முடிந்ததும் கத்திக்குத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட ரத்தோர் கட்டுகளுடன் கோர்ட்டுக்கு வந்தார். ஆனால் இந்த வழக்கு பிப்ரவரி 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
| < Prev | Next > |
|---|







