சென்னை: ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளையொட்டி முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
நவராத்திரி விழாவையும், வெற்றித் திருநாளாம் விஜயதசமித் திருநாளையும் மகிழ்வுடன் கொண்டாடும் இந்த இனிய நன்நாட்களில் எனதருமை தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
எங்கெங்கும் நிறைந்து நிற்கும் அன்னை பராசக்தியை, துணிவைத் தரும் துர்க்கையாகவும், செல்வத்தைத் தரும் திருமகளாகவும், வாழ்விற்கு வளம் சேர்க்க அறிவைத் தரும் கலைமகளாகவும், ஒன்பது நாட்கள் வணங்கி வழிபட்டு, சரஸ்வதி பூஜையையும், ஆயுத பூஜையையும் கொண்டாடி பத்தாவது நாளை வெற்றித்திருநாளான விஜயதசமி திருநாளாக கொண்டாடி மகிழ்கிறோம்.
செய்யும் தொழிலே தெய்வம் என்று உழைப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கை வளத்திற்கு வழி செய்திடும் தொழிலுக்கு ஆதாரமான தொழிற்கருவிகளை பூஜைக்குரிய பொருட்களாக வைத்து மென்மேலும் தங்கள் தொழில் வளர அன்னையின் அருள் வேண்டி வழிபடும் திருநாளாக ஆயுதபூஜை அமைகிறது.
இந்த ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவரும், உடல் நலமும், பொருள் வளமும், அறிவுத்திறனும் பெற்று வெற்றி மேல் வெற்றி பெற்றிடவும், அன்னை பராசக்தியின் பரிபூரண அருளைப் பெற்று அனைத்து நலன்களும் அடைந்திடவும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தமிழக மக்கள் அனைவருக்கும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




