பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிற்கு நில மோசடி வழக்கில் கைது செய்யப் பட்டு சில மணி நேரங்களிலேயே நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
தனியாரிடம் இருந்து அரசால் கையகப் படுத்தப் பட்ட நிலத்தை, முறைகேடாக தன் உறவினர்களுக்கு விற்றதாக எடியூரப்பா மீது குற்றச்சாட்டு எழுந்தது. தனியார் சுரங்கங்களுக்கு முறைகேடாக உரிமம் வழங்கியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. தொடர் அரசியல் குடைச்சல்களால் வேறு வழியின்றி தன் பதவியை கடந்த ஜூலை மாதம் எடியூரப்பா ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே நில மோசடி வழக்கில் எடியூரப்பாவுக்கு கைது ஆணை பிறப்பிக்கப் பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்ய காவல்துறையினர் நேற்று காலை (அக்.15) எடியூரப்பா இல்லத்திற்கு சென்றனர். அப்போது எடியூரப்பா வீட்டில் இல்லை.
இதனையடுத்து நேற்று மதியம் 3.40 மணியளவில் எடியூரப்பாவே லோகாயுக்தா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவர் அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் இருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, எடுயூரப்பா சிறையில் அடைக்கப் பட்டார்.
இந்நிலையில், நேற்று (அக்.15) நள்ளிரவு எடியூரப்பாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் மூன்று முறை வாந்தி எடுத்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து, அதிகாலை 1.45 மணியளவில் எடியூரப்பா பெங்களூரு ஜெயதேவா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப் பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. அவருக்கு மருத்துவ பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர். பரிசோதனை முடிவுகள் வெளிவர 48 மணி நேரம் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள எடியூரப்பாவை, கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் இன்று (அக்.16) காலை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சதானந்த கவுடா, 'எடியூரப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. தற்போது அவர் பேசக் கூடிய நிலையில் இல்லை. மருத்துவ பரிசோதனை முடிவுகள் 2 நாட்களில் வெளிவரும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.' என்றார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





