புதுதில்லி: ஜனவரி 30, 1948ம் ஆண்டு மகாத்மா காந்தி இறப்பதற்கு பத்து நாளுக்கு முன்பு எடுக்கப் பட்ட அவரது ரத்த பரிசோதனை முடிவு அறிக்கை தற்போது ஏலத்துக்கு வரப் போகிறது. ஜனவரி 21, 1948 என தேதியிட்ட பழுப்பேறிய, ரத்த பரிசோதனை அறிக்கையின் காகிதத்தை, கடந்த ஆண்டு, காந்திஜியின் மூக்கு கண்ணாடியை ஏலத்துக்கு விட்டு சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ் ஏஞ்சல்ஸ் தொழிலதிபர் ஜேம்ஸ் ஓட்டிஸ்தான் ஏலம் விடப் போகிறார். ஜேம்ஸ் ஓட்டிஸ், மின் தூக்கியை (Lift) வடிவமைத்தவரின் பரம்பரையை சேர்ந்தவர் ஆவார்.
காந்திஜியின் ரத்த பரிசோதனை அறிக்கையை ஏலம் விடுவதில் கிடைக்கும் பணத்தை வைத்து, எல் சவேடார், குட்டேமலா, நிகராகுவா ஆகிய நாடுகளில் நடந்து வரும் சர்வாதிகார ஆட்சியை அகிம்சை முறையில் கலைய செலவழிக்கப் போவதாக ஜேம்ஸ் ஓட்டிஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காந்திஜியின் பரம்பரையை சேர்ந்தவரும், காந்தி ஸ்ம்ருதி, தர்ஷன் சமிதி மற்றும் கஸ்தூரி பா காந்தி தேசிய நினைவு அறக்கட்டளை ஆகியவற்றின் துணை தலைவருமான தாரா காந்தி பட்டாசார்ஜி கூறுகையில், “ரத்த பரிசோதனை அறிக்கை ஒருவரின் சொந்த ஆவணம். அதை ஏலம் விடுவது அழகல்ல. இதற்கு எப்படி பதிலளிப்பது என தெரியவில்லை.” எனக் கூறியுள்ளார்.
இது குறித்து ஜேம்ஸ் ஓட்டிஸ் கூறுகையில், “இந்த ஏல வருமானம் மூலம் லத்தீன் அமெரிக்காவில் நடந்து வரும் சர்வாதிகார ஆட்சிகளை அகிம்சை முறையில் கலைய செலவழிக்கப் போகிறேன். காந்தியின் பொருட்களை நான் பத்திரமாக பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருப்பதில் அர்த்தம் ஏதும் இல்லை. காந்திஜியின் பொருட்களை ஏலம் விட்டு, காந்திஜின் கருத்துக்களை பரப்புவதே என் கொள்கை.”எனக் கூறியுள்ளார்.
ஓட்டிஸ் போலவே காந்தி கொள்கையில் ஈடுபாடு உடைய அவரது ஆசிரியர் கர்ட்ஸ் கூறுகையில், “காந்திஜியின் பொருட்களை இந்திய அரசிடம் ஒப்படைக்க ஓட்டிஸ் தயாராக உள்ளார். ஆனால், அகிம்சையை நிலைநிறுத்த அவற்றை பயன் படுத்துவதாக இந்திய அரசு அவருக்கு உறுதி அளிக்க வேண்டும். மேலும், காந்திஜியின் புகழை பரப்ப, உலகம் முழுவதும் அவற்றை கண்காட்சியாக நடத்த இந்திய அரசு ஒப்புக் கொள்ள வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.
புதிதாக பல காந்திகள் முளைத்திருப்பதால், பழைய காந்திஜி பற்றி சிந்திக்க மத்திய அரசுக்கு நேரம் இல்லையோ என்னவோ!!
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|




