
லண்டன்: வாகனம் ஓட்டும் போது வானொலியில் கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டு போட்டிகளின் நேரடி வர்ணனையை கேட்பது, குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை ஆபத்தானதாகும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது, செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவது, வானொலியில் பாடல்கள் கேட்டுக் கொண்டே வாகனம் ஓட்டுவது ஆகியவை மிகவும் ஆபத்தான செயலாகும். இவற்றை தவிர்க்கும் படி காவல் துறையும், அரசுகளும் எவ்வளவோ மக்களிடம் வலியுறுத்தினாலும் யாரும் கேட்பதில்லை.
இதனால், பல சமயம் மோசமான சாலை விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நேர்ந்து விடுகிறது. அதுவும், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள், கால்பந்து போட்டிகள், விம்பிள்டன் டென்னிஸ் போன்ற முக்கியமான விளையாட்டு போட்டிகள் நடக்கும் போது அவற்றின் நேரடி வர்ணனையை வானொலியில் கேட்க பலருக்கும் அலாதி ஆர்வம்.
இவ்வாறு வாகனம் ஓட்டி செல்லும் போது விளையாட்டு போட்டிகளின் நேரடி வர்ணனை கேட்பது, குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை விட ஆபத்தானதாகும் என்பது போக்குவரத்து ஆய்வு கூடம் (Transport Research Laboratory) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு 25 வயதில் இருந்து 45 வயது வரை இருக்கும் 18 பேரிடம் (9 ஆண் - 9 பெண்) நடத்தப் பட்டது.
விளையாட்டு போட்டிகளின் நேரடி வர்ணனையை கேட்டுக் கொண்டே வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கிக் கொள்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. நேரடி வர்ணனையை கேட்டுக் கொண்டே வாகனம் ஓட்டுவதால், சாலையை வாகன ஓட்டிகள் கவனிப்பதில்லை. இதனால் வண்டி ஓட்டும் போது கடைசி நொடியில்தான் முக்கிய முடிவுகளை எடுக்கின்றனர்.
விளையாட்டு போட்டிகளின் பதற்றமான கட்டங்களில், வண்டியை சாலையோரத்தில் பத்திரமாக நிறுத்தி விட்டு, நேரடி வர்ணனையை நிம்மதியாக கேட்டு விட்டு, மீண்டும் பயணத்தை தொடரலாம் என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த செய்தியை தி டெலிகிராஃப் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|





