சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப் படுவது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து நேற்று (ஜூலை 8) கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொடுமை புரிவதென்பது இது முதல் முறையல்ல. தொடர்ந்து நடைபெறும் தொடர்கதையாக உள்ளது.தமிழக மீனவர்களின் இந்தத் துயர நிலை குறித்து, தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கும், பிரதமருக்கும், தொடர்புடைய அமைச்சர்களுக்கும் இதுவரை பல முறை நேரிலும், கடிதங்கள் மூலமும் கோரிக்கைகள் விடுத்தும் தமிழக மீனவர்களின் அவலம் நின்றபாடில்லை.
தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறை சித்திரவதைக்கும், கொலைக்கும் ஆளாகும்போது மத்திய அரசிடம் நாம் முறையிடுவதும், அவர்களும் நம்மைச் சமாதானப்படுத்துகின்ற முயற்சியிலே ஒரு கடிதமோ, வேண்டுகோளோ இலங்கை அரசுக்கும் விடுப்பதும், அதற்குப் பிறகு சில நாள்களில் இப்படிப்பட்ட கொடுமை நடைபெறுவதும் வாடிக்கையாகிவிட்டது.
இந்திய-இலங்கை அரசுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை அண்மையில் நடைபெற்று ஒப்பந்தம் போடப்பட்ட நேரத்திலே கூட, தமிழக மீனவர்களின் இந்த நிலை குறித்து விரிவாகப் பேசப்பட்டு தமிழக மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்தால் கூட, அவர்களை தாக்குவதோ, கொலை செய்வதோ கூடாது என்றும், முறைப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர இதுபோன்ற செயல்களில் இலங்கைக் கடற்படையினர் ஈடுபடக் கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் இக் கொடுமையைக் களைய மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு இதுபோன்ற செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, திமுக மீனவர் அணி சார்பில், சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் அருகில் நாளை (ஜூலை 10) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் தமிழக மீனவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என திமுக கேட்டுக் கொண்டுள்ளது.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|






