புதுதில்லி: கெளரவ கொலைகளை தடுக்க கடுமையான சட்டம் ஒன்றை விரைவில் மத்திய அரசு அமல் படுத்த உள்ளதாக உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இனத்தின் கட்டுப்பாடுகளை மீறி ஒரு பெண் அரைகுறை ஆடைகள் அணிந்தாலோ, காதல் திருமணம் செய்ய எண்ணினாலோ, யாருடனாவது தகாத உறவு கொண்டிருந்தாலோ, ஒரு பெண்ணை, ஊரில் இருக்கும் ஆண்கள் பலர் சேர்ந்து கொடூரமாக கொலை செய்யும் வழக்கம் அண்மை காலத்தில் அதிகரித்துள்ளது. இதை கெளரவ கொலை என்று அழைக்கிறார்கள்.
இவ்வாறாக நடக்கும் கெளரவ கொலைகளை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த பிரச்சினை குறித்து எழுப்பப் பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு உள்துறை அமைச்சர் சிதம்பரம் இன்று (ஆக.5) நாடாளுமன்றத்தில் பதிலளித்து பேசினார். அவர் கூறியதாவது:
“கெளரவ கொலைகளை தடுக்க பிரத்தியேக சட்டம் தற்போது இல்லை. இந்திய தண்டனை சட்டத்தின் படியே தண்டனை அளிக்க முடியும்.
கெளரவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டத்தை மத்திய அரசு விரைவில் அமல் படுத்தப் போகிறது. இதற்கான, சட்ட முன் வரைவு மசோதாவை தயாரிக்க, மந்திரி சபையின் ஒப்புதலைப் பெற்று, அமைச்சர் குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடரிலேயே அந்த மசோதா தாக்கல் செய்யப் படும்.
கெளரவ கொலைகளை நிகழ்த்துவோருக்கு கடுமையான தண்டனை அளிப்பதோடு, பொது இடத்தில் பெண்களை நிர்வாணப் படுத்தி சித்திரவதை செய்வது போன்ற கொடூரங்களையும் தடுக்கவும் இந்த புதிய சட்டம் உதவும்.
கெளரவ கொலைகளை தடுக்க மாநில அரசுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.”
இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|





