சென்னை: நட்பு காரணமாகவே திருமாவளவன், பாமகவை திமுக கூட்டணியில் சேர அழைப்பு விடுத்திருப்பதாக பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட பாமக நிர்வாகிகள் அறிமுக கூட்டமும், செயற்குழு கூட்டமும் சென்னை ராஜா அண்ணாமலைப்புரத்தில் இன்று (செப்.2) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் நிருபர்ளிடம் ராமதாஸ் கூறியதாவது:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பாமகவின் நலன் விரும்பி ஆவார். அவர் எப்போதும் நட்புறவுடன் இருக்க விரும்புபவர். அந்த அடிப்படையிலேயே அவர் எங்களை திமுக அணிக்கு அழைத்துள்ளார். எங்களை பொறுத்தவரை கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டில் மாற்று அணி அமைய வேண்டும். நல்ல மாற்றம் உருவாக வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள். அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ற
வகையில், மாற்றத்தை தருவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். மக்களும் அதற்கு தயாராக வேண்டும்.
அரசியலில் எதுவும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை என்ற சித்தாந்தம் எப்போதும் எல்லோருக்கும் பொருந்தும்.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



