பாட்னா: ஜூலை 5ம் தேதி நடைப்பெற்ற நாடு தழுவிய பந்தை தொடர்ந்து லல்லுவும் பாஸ்வானும் இணைந்து நடத்தும் மாநிலம் தழுவிய பந்த் இன்று (10/07/2010) பீகாரில் தொடங்கியது.
மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாம் முறையாக ஆட்சியமைத்ததிலிருந்து பெட்ரோல் டீசல் விலையுயர்வு என்பது தினசரி விஷயமாகிவிட்டது. இம்முறை பெட்ரோல் டீசல் விலையுடன் சமையல் கேஸ் விலையும் அதிகரித்துள்ளது.
அது மட்டுமின்றி தேவைப்படும் போது விலையை உயர்த்திக் கொள்ளும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளித்திருப்பதால் 15 நாட்களில் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் இம்முறை இதற்கு எதிர்ப்புகளும் சற்று அதிகமாகவே உள்ளது. ஜூலை 5 ம் தேதி எதிர்கட்சிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தியது. இதைத் தொடர்ந்து ராஷ்ட்ரிய ஜனதா கட்சியும் , லோக் ஜனசக்தி கட்சியும் இணைந்து பீகாரில் இன்று (10/07/2010) மாநில அளவிலான பந்த் நடத்துகிறது.
இதுவரை எந்த அசம்பாவித சம்பவங்களும் நடந்ததாகத் தெரியவில்லை. ரயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை. அரசுப் பேருந்துகள் சற்றுக் குறைவாகவே இயங்குகின்றன. தனியார் பேருந்துகள் அசம்பாவிதத்திற்கு அஞ்சி போக்குவரத்தை நிறுத்தியுள்ளன.
அத்தியாவசியத் தேவையான மருந்துகள், பால் போன்ற சேவைகள் பாதிக்கப்படாது என லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். இந்த போராட்டம் விலையுயர்வை கட்டுப்படுத்தாத மத்திய மாநில அரசுகள் இரண்டையும் கண்டித்து நடத்தப்படுகிறது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|



