சென்னை: தமிழ்நாட்டில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டைக் கண்டித்து நாளை (ஜூன் 16) விழுப்புரத்தில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மின் உற்பத்தி அதிகரித்ததால் மாவட்டங்களில் மின்வெட்டு குறைக்கப்பட்டது என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அறிவித்த சில தினங்களிலேயே மீண்டும் ஏற்கனவே இருந்ததை விட கடுமையான மின்வெட்டை ஜூன் 3ம் தேதி முதல் மின்சார வாரிய அதிகாரிகள் அறிவித்தனர்.
ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 11 மணி நேரம் மின்சாரம் இல்லை. ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கேட்டால் காற்றாலை மூலம் வரவேண்டிய மின் உற்பத்தி `திடீரென்று' குறைந்து விட்டதாகவும், நீர் மின்சாரம் உற்பத்தி மழையை நம்பி இருப்பதனாலும் சுமார் 3,000 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.
வாழ்க்கைக்கு இன்றியமையாத மின்சாரம் எப்போது வரும்? எப்போது போகும்? என்று தெரியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, நாளை காலை,வாட்டி வதைக்கும் வரலாறு காணாத மின்வெட்டை அமல்படுத்தும் திமுக அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், தேமுதிக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தும்.
இவ்வாறு தனது அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





