புதுதில்லி: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை ஏற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, உள்ளூர் சந்தையில் எரிவாயு பொருட்களின் விலை நிர்ணயிக்கப் பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்தால், விலைவாசி பல மடங்கு அதிகரித்து விடும். இதனால் பொது மக்கள் இன்னலுக்கு ஆளாவார்கள்.அதே சமயம், உள்ளூர் சந்தையில் எரிவாயு பொருட்களின் விலை, சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப உயர்த்தப் படாததால், எண்ணெய் நிறுவனங்கள் மோசமான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தன.
எரிவாயு பொருட்களின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த கூடாது. அவற்றின் விலையை நிர்ணயிக்கும் உரிமை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப் பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலவியது.
எரிவாயு விலை ஏற்றம், தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கும் என்பதால், இது பற்றி முடிவெடுக்க மத்திய அரசு தயங்கி வந்தது. இந்நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை ஏற்றவும், எரிவாயு பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கவும் மத்திய அரசு இன்று (ஜூன் 25) முடிவெடுத்துள்ளது.
இதன் படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.75 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும், சமையல் எரிவாயு விலை, ஒரு உருளைக்கு 35 ரூபாயும் உயரும். இந்த விலை ஏற்றம் இன்று நள்ளிரவு (ஜூன் 25 இரவு 12 மணி) முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது.
எரிவாயு விலை ஏற்றத்துக்கு,மத்திய அரசின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸும், திமுகவும் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




