சென்னை: நாகப்பட்டினம் துறைமுகத்தின் மேம்பாட்டிற்கு ரூ.380 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
பொது - தனியார் கூட்டமைப்பின் மூலம் சிறிய துறைமுகங்களை மேம்படுத்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் நாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தை பொது - தனியார் கூட்டமைப்பில் ரூ. 380 கோடி செலவில் அனைத்து பருவ கால நிலைக்கேற்ப ஆழ்கடல் கப்பலனை மற்றும் பசுமை சூழலுடன் கூடிய துறைமுகமாக மேம்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இத்துறைமுகம் மேம்படுத்தப் பட்டு அதனுடைய செயல்பாடுகள் துவங்கும் முதல் ஆண்டில் சுமார் 10 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டு, அதன் மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 20 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.
இது படிப்படியாக வளர்ச்சி பெற்று 25ம் ஆண்டில் சுமார் 60 லட்சம் டன் சரக்குகள் கையாளும் நிலைக்கு உயரும். அதன் மூலம் சுமார் 120 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வழிவகை ஏற்படும்.
தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள இந்த துறைமுகத்தின் மேம்பாட்டினால், இதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான அத்தியாவசிய துறைமுக இணைப்பு வசதி இதன் மூலம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
மேலும், இத்திட்டத்தின் மூலம் தொழில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள இப்பகுதிகளில் அதிக வேலைவாய்ப்பு வசதியும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





