சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் ஆசிரியர்கள் தினமாக இன்று (செப்.5) நாடெங்கும் கொண்டாடப் படுகிறது.
இதனையொட்டி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
ஆசிரியர் தினமாக கொண்டாடப் படும், இந்நாளில் சீரிய முறையில் கல்வித் துறையில் தொண்டாற்றி வரும் ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரொக்கப் பரிசுடன், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்புப் பதிவு முன்னுரிமைப்படி இதுவரை ஏறத்தாழ 80 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.ஒப்பந்தமுறை நியமனத்தில் குறைந்த ஊதியத்துடன் பணியாற்றிய 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம், பணியிட மாறுதலுக்கு கலந்தாய்வு என பல்வேறு சலுகைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் இத்தகைய அரிய பல திட்டங்களால் ஆசிரியர்கள் மகிழ்வோடு பணி புரிந்துவரும் இந்த வேளையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டின் ஆசிரியர் தின விழா சிறப்புடன் நிகழவும், ஆசிரியப் பெருமக்கள் தங்கள் குடும்பத்துடன் வளமாகவும், நலமாகவும் வாழவும் உளமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி வாழ்த்தியுள்ளார்.
ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:
மனிதனாகப் பிறத்தல் அரிது; அவ்வாறு பிறந்தாலும் கல்வியில் சிறந்து விளங்குதல் அதைவிட அரியது என்பர். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கல்வியை போதித்து மாணவ- மாணவியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஆற்றல் படைத்தவர்கள் ஆசிரியர்கள். இளைய சமுதாயத்தினரை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும், புகழ் மிக்கவர்களாகவும் ஆக்கும் சக்தி படைத்தவர்கள் ஆசிரியர்கள்! சமூக சேவை செய்வதற்குச் சிறந்த வழி ஆசிரியர் பணி என்று சொன்னால் அது மிகையாகாது.
தலைசிறந்த தத்துவ ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான மறைந்த டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த நாளாகிய இந்த நன்னாளில், கல்வியின்மை நீங்கட்டும். ஆசிரியர் வாழ்வு சிறக்கட்டும் என்று தெரிவித்து, எனது அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தனது வாழ்த்து செய்தியில் கூரியுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




