சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் முறையாக வருமான வரி கட்டாமல் கறுப்புப் பணம் வைத்திருப்பதாக முதல்வர் கருணாநிதி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து, கேள்வி-பதில் பாணியில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக தலைவராக இருக்கின்ற நான் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதுவதன் மூலம் வருகின்ற ஊதியம் முழுவதையும் வருமான வரி கட்டியது போக மிச்சத்தை பொது நலன்களுக்கான நிதியாக வழங்கி விடுகிறேன். சில நேரங்களில் அரசின் முதல்வரின் பொது நிவாரண நிதியிலும் அந்தத் தொகையைச் சேர்த்து வழங்கச் செய்திருக்கிறேன்.
கடந்த 2004-2005-ம் ஆண்டில் "மண்ணின் மைந்தன்' திரைப்படத்துக்கு நான் திரைக்கதை, வசனம் எழுதினேன். அதன்மூலம் கிடைத்த ஊதியம் மற்றும் "கண்ணம்மா' படத்துக்கு கிடைத்த சம்பளம் ஆகியவற்றை சுனாமி நிவாரணத்துக்காக அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் தம்பி மு.க.ஸ்டாலின் நேரில் அளித்தார்.
அது போலவே, "உளியின் ஓசை' படத்தின் மூலம் கிடைத்த வருவாயில் வருமான வரி போக மீதியுள்ள தொகையை திரைத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றும் மூத்த கலைஞர்களுக்கு நேரடியாக வழங்கினேன். கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை மூலமாகவும் இதுவரை 2 ஆயிரத்து 49 பேருக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் நிதி அளிக்கப்பட்டுள்ளது. சிறந்த புத்தகங்களை எழுதும் எழுத்தாளர்களுக்கு "கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை' மூலமாக பொற்கிழிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், ஒரு கோடியை தமிழ்ச் செம்மொழி நிறுவனத்துக்கு வழங்கி, அதன்மூலம் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை வழியாக கல்வெட்டியல், தொன்மையியல், நாணயவியல் ஆகிய பிரிவுகளில் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
"பெண் சிங்கம்', "இளைஞன்' போன்ற படங்களுக்கு கதை, வசனம் உள்ளிட்டவை எழுதியமைக்காகக் கிடைத்த தொகையில் வருமான வரி போக மீதியுள்ள தொகை அருந்ததியர் மாணவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது.இதற்கெல்லாம் மேலாக, சென்னை கோபாலபுரத்தில் இப்போது வாழ்ந்து வரும் என்னுடைய வீட்டை ஏழைகளுக்குப் பயன்படும் மருத்துவமனையாக மாற்றிட முடிவு செய்து அதற்கான பத்திரப் பதிவுகளும் செய்யப்பட்டு விட்டன.
இப்படிப்பட்ட என்னையும் ஊழல் கட்சி என்கிறார். மற்றொரு கட்சியையும் (அதிமுக) ஊழல் கட்சி என்கிறார். இந்த இரண்டு கட்சிகளோடும் கூட்டணி சேர மாட்டேன் என்று கூறுகிற விஜயகாந்த், ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க லட்சக்கணக்கில் பணம் வாங்குகிறார்.
இந்தப் பணத்தில் பெரும் பகுதி வருமான வரி கட்டாமல் கறுப்புப் பணமாக வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அவர் ஊழலைப் பற்றி இப்படிப் பேசியிருப்பது உலகத்தினர் வாய் விட்டு சிரிப்பதற்குரிய கேலியாக இருக்கிறது.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




