கொல்கத்தா: மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி மத்தியஸ்தராக இருந்தால் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என மாவோயிஸ்ட்கள் தெரிவித்திருக்கிறார்கள். மாவோயிஸ்ட்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்திருப்பது வரவேற்கதக்க விஷயம்தான் ஆனால் தான் மத்தியஸ்தராக இருப்பதுக் குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கம், சட்டீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்ட் பிரச்சினை பெருமளவு உள்ளது. இதனால் அடிக்கடி வன்முறைகள் வெடிப்பதும், போலீசாருடன் துப்பாக்கி சண்டை நடப்பதும் சகஜமாகிவிட்டது. மாவோயிஸ்ட்களை முடக்க பிரதமர் மன்மோகன் சிங்கும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் பல்வேறு திட்டங்கள் தீட்டி வருகின்றனர்.
மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த 9ம் தேதி மேற்குவங்க மாநிலம் லால்கரில் நடத்திய பேரணியில் மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாகப் பேசினார். இது எதிர்கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி மத்திய அரசுக்கு தர்ம சங்கடத்தை உண்டு பண்ணியது. இந்நிலையில் மாவோயிஸ்ட்களின் தலைவர் கிஷன்ஜி மூன்று மாதக் காலத்திற்கு போரை நிறுத்தி வைப்பதாகவும் அந்த காலகட்டத்தில் மம்தா பானர்ஜியின் தலையீட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும் தாங்களாகவே என்றும் வன்முறையில் ஈடுப்பட்டதில்லை, மத்திய அரசின் செயல்பாடுகளே தங்களை வன்முறையில் இறங்க தூண்டுகின்றன எனவும் தெரிவித்தார்.
மாவோயிஸ்ட்களை ஒழிப்பதற்காக போலிஸ் படைக்கு ரூ.800 கோடி ஒதுக்கியுள்ளது. அந்த பணத்தை ஏன் மேற்கு வங்கம், சட்டீஸ்கர், ஜார்கண்ட், போன்ற மாநிலங்களின் வளர்ச்சி பணிக்கு செலவிடக்கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுக்குறித்து இன்று (18/08/2010) டெல்லி கிளம்பும் முன் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி பேரணியில் மாவோயிஸ்ட்கள் பற்றி பேசியது தனது மற்றும் திரிணாமூல் காங்கிரஸின் கருத்து மட்டுமே. பேரணியில் பேசிய அனைத்து பேச்சிற்கும் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். இதுப் போன்ற மக்கள் போராட்டத்திற்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும். இருப்பினும் தான் மத்தியஸ்தராக இருப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|



