புதுதில்லி: பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை எதிர்த்து நாளை (ஜூலை 5) நடத்தப் படும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் குறித்து பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் இன்று (ஜூலை 4) அவசர ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனை கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் அத்வானி கூறியதாவது:
“பாரத் பந்த் நடத்துவதால் பெட்ரோல், டீசல் விலை குறையாது என பெட்ரோலிய துறை நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துள்ளது. முழு அடைப்பு போராட்டம் நடத்தினால் விலை குறையும் என நாங்களும் கூறவில்லை. ஆனால், அரசின் மக்கள் விரோத போக்குகளை எதிர்கட்சிகள் தட்டி கேட்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைப்பது மத்திய அரசின் கையில்தான் உள்ளது. ஆனால், இந்த பிரச்சினைக்கு மத்திய அரசிடம் எந்த தெளிவான திட்டமும் இல்லை.
விலைவாசி உயர்வை மத்திய அரசு கண்டு கொள்வதே இல்லை. சாதாரண மக்களுக்கான அரசு என கூறிக் கொள்கிறார்கள். ஆனால், 2004 முதல் விலைவாசி ஏறிக் கொண்டே இருக்கிறது. உணவு பொருட்களின் விலை ஏறியிருக்கும் சூழ்நிலையில் கூட பெட்ரோலிய பொருட்களின் விலையை ஏற்றியுள்ளது மத்திய அரசு.” இவ்வாறு அத்வானி கூறினார்.
ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் கூறுகையில், “மத்திய அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால், பாரத் பந்த் மிகப் பெரிய வெற்றி அடையும். பெட்ரோலியப் பொருட்கள் விலை ஏறும் போதெல்லாம் விலைவாசியும் ஏறி வருகிறது. இந்தியாவைவிட மற்ற நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை மிக குறைவு.
பெட்ரோலின் உண்மையான விலை லிட்டருக்கு ரூ.16.50 மட்டும்தான். ஆனால், அதின் மீது ஏகப்பட்ட வரிகள் விதித்து ரூ.53.05 பைசாவாக விலையை உயர்த்தி விட்டனர். பாரத் பந்த் அமைதியாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.” என்றார்.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் பாரத் பந்த்தில் பங்கேற்கின்றன.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




