புதுதில்லி: தனக்கு எதிராக எடுக்கப் படும் எந்த சட்டபூர்வ நடவடிக்கைகளையும் சந்திக்க தயாராக உள்ளதாக இந்தியா வந்திருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
1986ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றவர் டக்ளஸ் தேவானந்தா. அப்போது கைது செய்யப் பட்ட டக்ளஸ், சில மாதங்களில் ஜாமீனில் வெளி வந்தார். பின்னர், 1988ம் ஆண்டு 10 வயது சிறுவனைக் கடத்தி 7 லட்சம் பணம் கேட்டு அவனது பெற்றோரை மிரட்டினார் டக்ளஸ்.
கீழ்பாக்கத்தில் பதிவான இந்த வழக்கில் டக்ளஸ் மீண்டும் கைது செய்யப் பட்டார். ஆனால், விரைவில் டக்ளஸ் இலங்கைக்கு தப்பி ஓடி விட்டார்.
தற்போது,தமிழர்களை கொன்று குவித்த போர் குற்றவாளியான இலங்கை அதிபர் ராஜபக்சே அமைச்சரவையில், அமைச்சராக உள்ளார் டக்ளஸ் தேவானந்தா. அது மட்டுமில்லாமல், இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வருகை தந்திருக்கும் ராஜபக்சேவுடன், டக்ளஸும் வந்துள்ளார்.
இந்நிலையில், டக்ளஸை கைது செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த தீர்ப்பின் மீதான விசாரணை நாளை (ஜூன் 11) நடைபெறுகிறது.
இதற்கிடையே, தில்லியில் செய்தியாளர்களிடம் டக்ளஸ் கூறியதாவது: “இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தப் படி எனக்கு பொது மன்னிப்பு வழங்கப் பட்டுள்ளது. இந்தியாவுக்கு நான் சட்டப் படியே வந்துள்ளேன். என் மீது ஏதாவது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப் பட்டால், அவற்றை சந்திக்க தயாராக உள்ளேன்.” இவ்வாறு டக்ளஸ் கூறினார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




