புதுதில்லி: 2000-ம் ஆண்டு நடந்த தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த மரண தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று (ஆக.30) உறுதி செய்தது.
பிளசண்ட் ஸ்டே நட்சத்திர விடுதி முறைகேடு தொடர்பான வழக்கில் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பையடுத்து அதிமுக தொண்டர்கள் தமிழகமெங்கும் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 44 மாணவிகள் தருமபுரி அருகே பேருந்தில் வந்து கொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், அந்த பேருந்துக்கு தீ வைத்தனர். இதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் தீயில் கருகி பலியானார்கள்.
இந்த வழக்கில், 3 அதிமுக தொண்டர்களுக்கு மரண தண்டனை அளித்து 2007ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 25 பேருக்கு, 2 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை தண்டனைகள் அளிக்கப் பட்டன. 3 பேரின் மரண தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் பட்டது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த 3 பேரின் மரண தண்டனை தீர்ப்பை, உச்சநீதிமன்றம் இன்று (ஆக.30) உறுதி செய்தது.
வரவேற்பு:
இதற்கிடையே, 3 பேரின் மரண தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, பலியான மாணவியரின் பெற்றோர் வரவேற்றுள்ளனர்.
சம்பவத்தில் இறந்த ஹேமலதாவின் தாய் காசியம்மாள் கூறுகையில்,”அப்பாவிகளுக்கு எதிராக கொடுமை செய்பவர்களுக்கு இந்த தீர்ப்பு நல்ல பாடம்.” என்றார்.
மற்றொரு மாணவியான கோகிலவாணியின் தந்தை குமாரசாமி குறிப்பிடுகையில், “குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப் பட்டுள்ளது. இந்த தீர்ப்பால், இதைப் போன்ற குற்றங்கள் இனி குறையும்.” என்றார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




