படாயா: 46 மணி நேரம் இடைவிடாமல் உதடோடு உதடு முத்தமிட்டு தாய்லாந்து தம்பதிகள் உலக சாதனை படைத்துள்ளனர்.
க்விஸ் போட்டிகளை நாம் கேள்வி பட்டுள்ளோம். வெளிநாடுகளில் கிஸ் போட்டிகள் அடிக்கடி நடத்தப் படுகிறது. இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு கிஸ்ஸதான் போட்டிக்கு தாய்லாந்து நாட்டின் லூயி துஸ்ஸாத் மெழுகுகலை அருங்காட்சியகம் இந்த கிளுகிளு போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணிக்கு (உள்ளூர் நேரம்) தொடங்கிய இந்த முத்தப் போட்டியில் 14 ஜோடிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சி தொடங்கி அரை மணி நேரத்தில், தன் ஆண் நண்பனுடன் போட்டியில் கலந்து கொண்ட ஒரு பெண் மயங்கி கீழே விழுந்து விட்டார்.
காதலர் தினமான நேற்று (பிப்.14) மதியம் வரை 7 ஜோடிகள் தாக்கு பிடித்து வந்தனர். பின்னர், 'திகட்டி'யதாலோ என்னவோ நேரம் ஆக ஆக ஒவ்வொருவராக போட்டியில் இருந்து கழன்றுக் கொண்டனர். இன்று (பிப்.15) அதிகாலை வரை கிட்டதட்ட 46 மணி, 24 நிமிடங்கள், 9 நொடிகளுக்கு முத்தத்தை தொடர்ந்த பாங்காக்கை சேர்ந்த தம்பதிகளான எகாசாய் மற்றும் லக்சனா திரானாத், கிஸ்ஸதானின் வெற்றியாளர்களாக அறிவிக்கப் பட்டனர். 2009ம் ஆண்டு ஜெர்மனி தம்பதியர்கள் நிகழ்த்திய 32 மணி நேர முத்த சாதனையை முறியடித்த இவர்களுக்கு ரூ.80,000 மதிப்புள்ள வைர மோதிரமும், ரூ.1,60,000 ரொக்கமும் பரிசாக வழங்கப் பட்டது.
ஆஹா, கரும்பு தின்னக் கூலியா! முத்தப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது; அதை விட பரிசும் கிடைக்கிறது. நாமும் ஒரு தடவை கலந்து கொண்டால் என்ன என்று யோசிக்கிறீர்களா? இந்த முத்தப் போட்டிகளில் விதிகள் மிகவும் கடுமையானவை என்பதையும் நீங்கள் தெரிந்துக் கொண்டிருக்க வேண்டும்.
தம்பதிகள் ஒரு நொடி கூட உதடுகளை பிரிக்கக் கூடாது. காபி, டீ, தண்ணீர் குடிக்க வேண்டுமென்றால் முத்தத்தை நிறுத்தாமல், ஸ்ட்ரா வைத்து குடித்துக் கொள்ளலாம். மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை இயற்கை உபாதைகளை தீர்த்துக் கொள்ளலாம், முத்தமிட்ட படியே! (சாட்சிக்கு அம்பயரும் இருப்பார்!!) .இதையெல்லாம் விட, முத்தப் போட்டியில் கலந்து கொள்ளும் போது, உட்காரவோ, படுத்துக் கொள்ளவோ கூடாது. நின்ற படியே முத்தமிட வேண்டும்.
தாய்லாந்து, ஒரு புறம் பாலியல் தொழிலில் கொடி கட்டி பறந்தாலும், கலாசாரத்திற்கு இன்னமும் முக்கியத்துவம் அளித்து வரும் ஓர் நாடு. இங்கு பொது இடங்களில் முத்தம் கொடுக்கவே தடை உள்ளது. அதனால், இந்தப் போட்டியில் கலந்து கொண்டவர்கள் தாங்கள் திருமணமான தம்பதிகள்தான் என்பதை நிரூபிக்க திருமண பதிவு சான்றிதழோ, பெற்றோரிடமிருந்து ஒப்புதல் கடிதமோ சமர்பிக்க வேண்டும் என்ற விதியுடன் இந்தப் போட்டி நடத்தப் பட்டது.
இந்த நிகழ்வை கின்னஸ் அமைப்பாளர்கள் அங்கீகரித்தால், எகாசாய் - லக்சனா தம்பதியர்களின் இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும்.
இந்த கிஸ்ஸதான் போட்டியை அமைப்பாளர்கள் இதைப் பற்றி கூறுகையில், "இந்த மேடையில் நின்று இடைவிடாது முத்தமிட்டுக் கொள்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. காதல் எவ்வளவு உன்னதமானது என்பதை இந்த உலகுக்கு உணர்த்தவே இந்தப் போட்டி நடத்தப் பட்டது. முத்தமிட்டுக் கொள்பவர்களுக்கு இடையே தகுந்த ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்தால் இந்தப் போட்டியில் கலந்து கொள்வது கடினம்." என்றார்.
Want to write for Maniyosai?
Download our android app


