புதுதில்லி: பாக்கிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இந்தியா அளித்துள்ள ரூ.25 கோடி நிவாரண நிதியை அந்நாட்டு அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
80 ஆண்டுகளிலேயே மோசமான வெள்ளம் அண்மையில் பாக்கிஸ்தானை தத்தளிக்க வைத்தது. இதில் 1700 பேர் இறந்தனர். 6,50,000 பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும், 60 லட்சம் பேருக்கு உடனடி நிவாரணம் தேவைப் படுவதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரூ. 25 கோடி நிவாரண நிதியை பாக்கிஸ்தானுக்கு வழங்க இந்திய அரசு முடிவு செய்தது. இதனை, கடந்த வாரம், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பாக்கிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷியிடம் தொலைபேசியில் தெரிவித்தார். ஆனால், இந்தியாவின் நிதியுதவியை ஏற்றுக் கொள்ள பாக்கிஸ்தான் மறுத்து வந்தது.
இந்நிலையில், இந்தியாவின் நிவாரண நிதியை ஏற்றுக் கொள்வதாக பாக்கிஸ்தான் அரசு இன்று (ஆக.20) அறிவித்துள்ளது. பாக்கிஸ்தான் வெள்ளத்தை பற்றி விவாதிக்க கூடியிருக்கும் ஐநா சபையின் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றிருக்கும் பாக். அயலுறவுத் துறை அமைச்சர் குரேஷி இதனைத் தெரிவித்தார். அப்போது, இந்திய அரசின் உதவியை பாக்கிஸ்தான் பெரிதும் வரவேற்பதாக குரேஷி கூறினார்.
இந்தியாவின் நிவாரண உதவியை பாக்கிஸ்தான் ஏற்றுக் கொண்டதற்கு இந்தியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app





