கோவை: நில அபகரிப்பு வழக்கில் சசிகலாவின் உறவினர் ராவணன் கைது செய்யப் பட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக சசிகலாவும் அவரது உறவினர்களும் அண்மையில் அதிமுவில் இருந்து நீக்கப் பட்டார். அப்போது, சசிகலாவின் சித்தப்பா மருமகன் ராவணனும் நீக்கப் பட்டார்.
ராவணன், தனக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்துக் கொண்டதாக கோவையை சேர்ந்த பாஜக பிரமுகர் ராதாகிருஷ்ணன் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் ராவணன் எந்த நேரத்திலும் கைது செய்யப் படக் கூடும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
இந்நிலையில், சென்னையில் தங்கியிருந்த ராவணனை கோவை சூலூர் காவல்துறையினர் நேற்று மாலை (ஜன.26) விசாரணைக்காக கைது செய்தனர். நேற்றிரவு சென்னையில் அவரிடம் காவல்துறையினர் துருவி துருவி விசாரணை நடத்தினர். பின்னர், ராவணன் சென்னையிலிருந்து கோவை அழைத்துச் செல்லப் பட்டார்.
இதற்கிடையே, நீலகிரி மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் செல்வராஜை லாரி இடித்து கொன்றதாக ராவணன் மீது அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் ராவணன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப் படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
Want to write for Maniyosai?
Download our android app




