சென்னை: சென்னை நகரில் அமைந்திருக்கும் தங்கு விடுதிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என தென் இந்திய தங்கு விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்க செயலாளர் நடராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் சென்னையில் இருக்கும் செக்கர்ஸ் நட்சத்திர தங்கு விடுதியை சில சமூக விரோதிகள் சூரையாடினர். இதில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. இந்த சம்பவத்துக்கு தென் இந்திய தங்கு விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கம் (SIHRA) கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தென் இந்திய தங்கு விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கத்தின் செயலாளர் நடராஜன் கூறுகையில், 'செக்கர்ஸ் ஓட்டல் மீதான தாக்குதல் கண்டிக்கத் தக்கது. ஓட்டல்களின் பாதுகாப்பு குறித்து வரும் வாரத்தில் சங்கம் கூடி பேசும்' என்றார்.
செக்ர்ஸ் தங்கு விடுதி மீதான தாக்குதல் குறித்து அந்த தங்கு விடுதியின் பொது மேலாளர் பூமேஷ் சோப்ரா கூறுகையில்,'இந்த தாக்குதலில் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன. மின் தூக்கி, இறக்குமதி செய்யப் பட்ட அலங்கார விளக்குகள், விலை உயர்ந்த மேஜைகள், கணிணிகள், தொலைக்காட்சி பெட்டிகள் என பல பொருட்கள் இந்த தாக்குதலில் சேதமடைந்துள்ளன. ஓட்டல்கள் மீதான தாக்குதல்கள் சென்னையில் தொடர்கதையாகி விட்டன.' என்றார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் தங்கியிருந்த தாஜ் கோரமாண்டல் நட்சத்திர தங்கு விடுதியை சில விஷமிகள் தாக்கியது நினைவிருக்கலாம்.
ஜெயலலிதா கண்டனம்:
இதற்கிடையே, செக்கர்ஸ் நட்சத்திர விடுதி மீது தாக்குதல் நடத்தியவர்களை காவல் துறை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறுகையில், ஜனநாயக ரீதியாக போராடுபவர்களை கைது செய்யும் காவல் துறையே, இந்த தாக்குதலை நடத்தியவர்களை காப்பாற்றி வருவதாக கூறியுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app



