ஒவ்வொரு நாட்டின் சட்டதிட்டங்களுக்கு தகுந்த மாதிரி, தனது வலைதளத்தில் பதியப் படும் தகவல்களை வடிக்கட்ட ட்விட்டர் சமூக வலைதளம் முடிவெடுத்துள்ளது. இதற்கான தொழில்நுட்பத்தை ட்விட்டர் இன்று (ஜன.27) அறிவித்துள்ளது.
இணையதளத்தை பொருத்த வரை ஒவ்வொரு நாடுகளுக்கும் வெவ்வேறு வகையிலான சட்டதிட்டங்கள் உள்ளன. ட்விட்டர் போன்ற வலைதளங்கள், பொதுமக்கள் பதியும் கருத்துக்களையே (User generated content) பிரதானமாகக் கொண்டு இயங்குவதால், அந்தந்த நாடுகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகவல் வெளியிடுவது முடியாதக் காரணமாக உள்ளது.
ஒரு குறிப்பிட்ட நாட்டில், ஒரு குறிப்பிட்ட பதிவுக்கு (tweet) எதிராக புகார் எழுந்தால், அந்த பதிவை ஒரே அடியாக நீக்கும் வழக்கத்தை ட்விட்டர் இது வரை கடைப்பிடித்து வந்தது.
தற்போது, எந்த நாட்டின் சட்டப்படி புகார் அளிக்கப் பட்டுள்ளதோ அந்த நாட்டில் மட்டும் அந்த குறிப்பிட்ட பதிவை படிக்க இயலாத படி ட்விட்டர் தனது தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளது.
உதாரணமாக, இந்திய சட்டதிட்டங்கள் படி ஒரு பதிவுக்கு எதிராக புகார் எழுந்தால், அந்த பதிவு இந்தியாவில் மட்டும் படிக்க இயலாது; மற்ற நாடுகளில் இயலும்.
தனது பயனீட்டாளர்களின் எண்ணிக்கையை ட்விட்டர் பன்மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதனால், பல்வேறு நாடுகளுக்கும் தனது சேவையை விரிவுப் படுத்தும் நோக்கில் ட்விட்டர் இந்த வடிக்கட்டும் கொள்கையை அறிவித்துள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app



