சென்னை:மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி தண்ணீரை திறந்து விட தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று (செப்.1) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இன்றைய (1.9.2010) காலை பத்திரிகையில் (தினமலர்), குறுவை சாகுபடி பாதிக்கும்; சம்பாவுக்கு வாய்ப்பில்லை, கடைமடைக்குத் தண்ணீர் இல்லை என்ற தலைப்பில் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியாகியுள்ளது.
போதிய நீர் வரத்து இல்லாததால், வழக்கமாக ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, ஜூலை 28-ந்தேதி திறக்கப்பட்டது. 2009 -ம் ஆண்டு ஜூன் 1 முதல் ஆகஸ்டு 31 வரை கர்நாடகத்திலிருந்து 81 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கப் பெற்றது. ஆனால் இந்த ஆண்டு இதே காலத்தில் 39 டி.எம்.சி. தண்ணீரே கிடைக்கப் பெற்றது. அதாவது, சென்ற ஆண்டை ஒப்பிடும்போது பாதியை விடக் குறைந்த அளவு தண்ணீரே கிடைக்கப் பெற்றுள்ளது.
இது குறித்து முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
ஆகஸ்டு மாதம் முழுவதும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால், மேட்டூரிலிருந்து வழங்கப்படும் தண்ணீர் அளவு 10,000 கன அடியில் ஆரம்பித்து பின்பு 8,000 கன அடியாகக் குறைத்து வழங்கப்பட்டு வந்தது. டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் ஆட்சித் தலைவர்களின் வேண்டுகோளின்படி இன்றிலிருந்து 12,000 கன அடி தண்ணீரை வழங்க முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
தொடர்ந்து சம்பா சாகுபடி சிறப்பாக நடைப்பெறத் தேவையான அளவு தண்ணீரை வழங்க தமிழக அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app




