சென்னை: ஆளுநர் புதியவராக இருந்தாலும், அவரது உரை பழையதே என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (ஜன.30) வெளியிட்ட அறிக்கை:
ஆளுநர் உரை ஆண்டுதோறும் வழக்கமாக அளிக்கப்படுகின்ற உரையாக உள்ளதே தவிர, மக்களின் நினைவுகளில் நிற்கத்தக்க புதிய திட்டங்கள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை.
இது வரை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தானே புயலால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களின் மறுவாழ்வுக்கான தொலைநோக்குடன் கூடிய திட்டங்கள் எதுவும் ஆளுநர் உரையில் அறிவிக்கப்படவில்லை.
கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம், முல்லைப் பெரியாறு அணை நீர்த்தேக்க பிரச்னை, மீனவர்கள் தினந்தோறும் கச்சத்தீவுப் பகுதியில் படும் அவதி போன்றவற்றில் இந்திய அரசு தொடர்ந்து அலட்சியப் போக்கை மேற்கொண்டு வருவதும், தமிழக அரசின் சார்பில் கடந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி, அதற்காக இந்திய அரசை வற்புறுத்துகிறோம் என்ற நிலைதான் தொடருகிறதே தவிர, இவற்றுக்கான தீர்வு எதையும் தமிழ்நாட்டு மக்களால் இதுவரை பெற இயலவில்லை.
பொதுவாக தமிழகத்தின் வளர்ச்சி விகிதம், வறுமை ஒழிப்புத் திட்டம், வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற எதை எடுத்துக்கொண்டாலும், கடந்த கால ஆளுநர் அறிக்கைகளில் சொல்லப்பட்டவை மீண்டும் மறுபதிப்பாகத்தான் இந்த ஆளுநர் உரையிலும் இடம்பெற்றுள்ளது.
ஆளுநர்தான் புதியவரே தவிர, ஆளுநர் உரை புதியதாகத் தெரியவில்லை.
இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app




