சென்னை: திமுக பொது குழு கூட்டத்தில் பங்கேற்றது, அழகிரியை சந்தித்தது போன்ற செயல்களில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் இன்னும் அதிமுகவிலேயே இருப்பதாக சபாநாயகரிடம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக எம்எல்ஏக்களான ஜெயங்கொண்டம் ராஜேந்திரன், கோவில்பட்டி ராதாகிருஷ்ணன் ஆகியோர் சமீபத்தில் நடந்த திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர். ராஜேந்திரன், அழகிரியை சந்தித்து பேசினார். அவர்களின் சந்திப்பின் போது எடுக்கப் பட்ட புகைப்படங்கள் பத்திரிகைகளிலும்
வந்தன.
இதையடுத்து 2 எம்எல்ஏக்களையும் கட்சித் தாவல் சட்டப் படி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சபாநாயகர் ஆவுடையப்பன் இருவரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில், இன்று (மார்ச் 4) ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் இருவரும் சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கக் கடிதம் அளித்தனர்.
அதில், நாங்கள் இன்னும் அதிமுக எம்எல்ஏக்களாகத் தான் உள்ளோம். அதிமுகவில் தொடரவே விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சபாநாயகர் ஆவுடையப்பன் கூறுகையில், கோவில்பட்டி எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறி விட்டதாகவும், அவர்கள் மீது கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா செங்கோட்டையன் என்னிடம் மனு கொடுத்தார்.இதையடுத்து, 2 எம்எல்ஏக்களும் 8ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை ஏற்று எம்.எல்.ஏக்கள், ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் இன்று விளக்க மனுக்களை என்னிடம் கொடுத்துள்ளனர்.
அதில் 2 பேரும் அதிமுகவில் நீடிப்பதாகவும், கட்சியில் உள்ள கோஷ்டி பூசல் காரணமாக தங்களைப் பற்றி மனு கொடுத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அமைச்சர்களை நேரில் சந்தித்து தொகுதி பற்றிய குறைகளை கூறுவதற்காகவே தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த விளக்க மனு ஆய்வில் உள்ளது என்றார்.
Want to write for Maniyosai?
Download our android app




