தமிழ் நாட்டிற்கென ஒரு மொழி, ஒரு தலைநகர், ஒரு அரசு என்று நமக்கே நமக்காக உள்ள ஒரு சில விஷயங்களைப் போல நம் தமிழகத்தின் கடவுளாகப் போற்றப்படுபவர் முருகப் பெருமான். சமஸ்கிருதமோ அல்லது மற்ற வடமொழிகளோ பேசாமல் நம் தமிழ்நாட்டிலேயே வாழ்ந்து தமிழ் மொழியிலேயேப் பேசியக் கடவுள் முருகன். அதனால் மற்ற தெய்வங்களைக் காட்டிலும் தமிழர்கள் அதிகம் கொண்டாடுவதும் வள்ளி மணாளனையே.

அறுபடை வீடுகள் மட்டுமல்லாது தமிழ்நாட்டில் எங்கெங்குப் பார்த்தாலும் அங்கு முருகன் கோயில் ஒன்றாவது இருக்கும். பெரும்பாலும் ஏதேனும் ஒரு குன்றின் மேல் ஏறி அமர்ந்திருக்கும் முருகன் சிறுவாபுரியில் பசுமையான வயல் வரப்புகள், வாழைத் தோப்புகள் புடைசூழ நடுவே கம்பீரமாக வீற்றிருக்கிறார்.
சிறுவர்கள் லவனும், குசனும் தன் தந்தை ராமனுடன் போர்புரிந்த இடமாதலால் சிறுவாபுரி என்ற பெயர் ஏற்பட்டது. அசுவமேத யாகம் செய்ய விரும்பிய ராமபிரான் யாகப் பசுவானக் குதிரையை ஏழேழுலகத்தையும் வென்று வர ஏவினார். அப்பொழுது வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் வசித்து வந்த ராமனின் குழந்தைகள் லவனும், குசனும் அக்குதிரையைப் பிடித்துக் கட்டிப் போட்டுவிட்டனர். அதை மீட்பதற்காக வந்த லட்சுமணரால் அவர்களை வெல்ல முடியவில்லை. அதனால் ஸ்ரீராமனே நேரிடையாக போரில் ஈடுப்பட்ட இடம் இச்சிறுவாபுரி. இதற்கு சின்னம்பேடு, சிறுவரம்பேடு (சிறுவர்களான லவனும், குசனும் அம்பு எடுத்ததால், சிறுவர்+அம்பு+எடு=சிறுவரம்பேடு ஆனது.) என்று வேறு சில பெயர்களும் உண்டு.
அருணகிரிநாதர் பாடிய 10000 திருப்புகழ்களில் இன்று மிஞ்சியிருப்பது 1330 திருப்புகழ்களே. அதில் அவர் 224 தலங்களைப் பற்றிப் பாடியுள்ளார். திருப்புகழ் பாடல்பெற்ற ஸ்தலங்களில் 9 இடங்கள் இதுவரைக் கண்டறியப் படாமலேயே இருக்கின்றன. கண்டறிந்த 215 தலங்களில் 35 தலங்களை வெகுச் சிறப்பாகப் பாடியுள்ளார். 8 தலங்களில் 4 திருப்புகழ் பாடியிருக்கிறார். திருப்புகழ் நாயகனாக முருகன் மட்டுமேயல்லாமல் 6 பாடல்களின் நாயகனாக விநாயகப் பெருமான் விளங்குகிறார்.
’சீதள வாரிஜ பாதா நமோ நம:’ என்ற ஒரு அர்ச்சனைத் திருப்புகழுடன் நான்கு திருப்புகழ் பாடிய 8 தலங்களில் சிறுவாபுரியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
“வானவர் ஊரினும் வீறாகி வீறள
காபுரி வாழ்வினு மேலாக வேதிரு
வாழ்சிறு வாபுரி வாழ்வே! சுராதிபர்
பெருமானே...”
எல்லா வளங்களும் அதிகமாகக் கொண்டுள்ள சிறுவாபுரிக்கு வருபவர் தேவேந்திரப் பட்டணத்தைக் காட்டிலும் வளமாக வாழ்வர் என்று அர்த்தம் தொனிக்கும் அர்ச்சனை திருப்புகழ் பாடலுக்கேற்ப இந்நகரில் வாழ்ந்த முருகம்மையார் என்ற முருக பக்தரின் வாழ்வு சிறப்புற்றது.
சிறுவாபுரியில் வசித்து வந்த முருகம்மையார் என்ற முருக பக்தை எப்பொழுதும் ஓயாது ‘முருகா! முருகா!’ என்றே உச்சரித்துக் கொண்டிருப்பார். அதனால் எரிச்சலுற்ற அவரது கணவர் முருகம்மையாரின் கையைத் துண்டித்தார். அதனால் அப்பொழுதும் முருகா என்று அழுதுத் துடித்தவருக்கு பாலசுப்ரமண்ய சுவாமி காட்சியளித்து கையை மீண்டும் ஒட்ட வைத்து குணமாக்கினார்.
சென்னை - கோல்கத்தா நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து 33 கிமி தொலைவில் உள்ளது சிறுவாபுரி கிராமம். ஊரை நுழையும் போதே, சென்னைக்கு மிக அருகில் இருக்கிறோம் என்பதையே மறக்கடிக்கும் அளவு எங்கு பார்த்தாலும் பச்சை பசேல். சிறுவாபுரியில் 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. உயரமானக் கொடிமரத்திற்கு முன்னால் மிக அழகான மரகதப் பச்சைமயில் வீற்றிருக்கிறது. கோவிலின் தென்மேற்கு மூலையில் மரகதக் கல்லில் சூரியனார் ஒளிவீசிக் கொண்டிருக்க நேர் எதிரில் ‘மரகத விநாயகர்’ என்ற பெயருடனே ராஜ கணபதி மரகதக் கல்லில் பச்சைப்பசேல் என்று மின்னுகிறார். இக்கோயிலில் உள்ள விக்கிரகங்களில் பாலசுப்ரமண்ய சுவாமி, ஆதி மூலர், நவக்கிரகம் தவிர மற்ற விக்கிரகங்கள் அனைத்தும் மரகதப் பச்சைக் கல்லில் செய்யப்பட்டது என்பது சிறப்பானது.
பின் பிரகாரத்தில் சண்டிகேசுவரர், ஆதிமூலவர் (இவர்தான் முன்பிருந்த பாலசுப்ரமண்ய சுவாமி விக்கிரகம்), நாகர், பைரவர், நவக்கிரகம் என பரிவார தேவதைகள் சுற்றியிருக்க நடுநாயகமாக பாலசுப்ரமண்ய சுவாமிக் காட்சி தருகிறார். இக்கோயிலில் நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் தத்தம் வாகனங்களோடு இருப்பது தனிச்சிறப்பு.
தெற்கே அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மையாரும் வீற்றிருக்க இருவருக்கும் நடுவே வள்ளி நங்கை முருகப்பெருமானின் கைத்தலம் பற்றும் திருமணக் கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார். திருமணத்தின் போது பெண்களுக்கே உரித்தாக இருக்கும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு மேலோங்க சற்றே சாய்ந்து ஒய்யாரமாக நிற்கும் வள்ளியம்மையை காண இரு கண்கள் போதாது.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|





மிக அருமையான பதிவு. எங்கள் ஊரை பற்றி இவ்வளவு சிறப்பாக பதிந்ததிற்கு நன்றி.
நன்றி
கிருஷ்ணமூர்த்தி. செ