’கடவுள் இருக்கிறாரா? இல்லையா?’ ’இருக்கிறார் என்றால் எங்கே இருக்கிறார்?’... இதுப்போல பல பகுத்தறிவு கேள்விகளை நாம் தினமும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம், நம்பிக்கைதான் கடவுள், இயற்கைதான் கடவுள் என்ற பல்வேறு பதில்களும் நம் காதில் விழுந்துக் கொண்டுதான் இருக்கிறது.
ஒவ்வொருவரும் கடவுளை ஒவ்வொரு விதத்தில் பார்ப்பது போல நம் இந்து கோயில்களில், அதிலும் குறிப்பாக சிவாலயங்களில், ஐம்பூதங்கள் வழிப்பாட்டு முறை மிகப் பிரபலம். நாம் எதிலிருந்து தப்பித்தாலும், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இந்த பஞ்சபூதங்களிலிருந்து தப்பி எங்கும் செல்லமுடியாது. அதனாலேயே, சிவாலயங்கள் பஞ்சபூத அடிப்படையில் அமைந்துள்ளன.
சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் (ஆகாயம்), காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில் (நிலம்), திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம் (நெருப்பு), திருவானைக்காவல் (நீர்), காளஸ்தி (காற்று) என மிகப் பிரபலமான சிவாலயங்கள் ஒவ்வொன்றும் ஐம்பூதங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதில் இவ்வாரம் நாம் பிரவேசிக்கப்போகும் ஆலயம் காற்றை வழிப்படும் காளஸ்தி.
இக்கோயில் ஆந்திரபிரதேசம், சித்தூர் மாவட்டத்தில், திருப்பதியிலிருந்து 36கிமி தொலைவில் ஸ்ரீபுரம், மும்முடி என்ற இரு பெருமலைகளின் நடுவே அமைந்துள்ளது. இவ்வூருக்கு தென்கைலாசம் என்றும் தட்சிண கைலாசம் என்றும் பெயர்கள் உண்டு. இக்கோயிலில் உள்ள லிங்கம் ‘வாயு’, காற்றின் வடிவாக போற்றப்படுகிறது.
தல வரலாறு: ஸ்ரீ காளஹஸ்தி கோயிலின் தல வரலாறு சற்றே வித்தியாசமாக இருக்கிறது. சிவபெருமானின் மூன்று தீவிர பக்தர்களின் ஈடு இணையற்ற பக்தியினால் உருவானதுதான் இந்த ஊரும், இந்த பெயரும். ’ஸ்ரீ’ என்றால் சிலந்தி, ’காளம்’ என்றால் பாம்பு, ‘ஹஸ்தி’ என்றால் யானை. இந்த மூன்று உயிரினங்களும் சிவபெருமானின் பக்தியில் மூழ்கி கிடந்தன. இவை மூன்றும் நண்பர்களாக இருந்தாலும், தான் ‘வாயுலிங்க’த்தை பூஜித்து வருவது மற்றவர்களுக்கு தெரியாமல் பூஜை செய்து வந்தன. யானை தினமும் தனது தும்பிக்கையில் நீர் கொண்டு வந்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, பின்னர் வில்வ மலர்களால் அலங்கரிக்கும். சிலந்தி லிங்கத்தை தூசி, குப்பை ஏதும் நெருங்காத வகையில் லிங்கத்தை சுற்றி வலைப்பின்னும். நாகமோ லிங்கத்தை தன் விலையுயர்ந்த மாணிக்கக் கல்லால் அலங்கரிக்கும்.
ஒருநாள் யானை அபிஷேகத்திற்கு நீர் கொண்டு வரும்போது சிறிது சிறிதாக சிலந்தி பின்னிய வலை, அப்பொழுது நன்கு அடர்த்தியாக லிங்கத்தை சுற்றி பரவியிருந்தது. வில்வ மலரைத் தவிர மாணிக்க கல் வேறு இருந்ததைக் கண்ட யானை, இதன் பின்னனி ஏதும் தெரியாமல், லிங்கத்தை யாரோ அசுத்தப்படுத்தி விட்டதாக நினைத்து தும்பிக்கையால் சுத்தம் செய்தது. இதை தவறாகப் புரிந்துக்கொண்ட நாகத்திற்கு கோபம் வந்து யானையை பழிவாங்குவதற்காக அதன் தும்பிக்கையில் புகுந்துக்கொண்டது. ஆனால் சற்று நேரத்தில் போராட முடியாமல் பாம்பு இறந்தது. பாம்பு கடித்ததால் யானையும் இறந்தது. யானை இறக்கும் முன் வலியில் தறிக்கெட்டு ஓடி லிங்கத்தின் மீது மோதிக்கொண்டது. அதனால் அங்கே இருந்த சிலந்தியும் யானையின் தும்பிக்கையால் அடிப்பட்டு இறந்தது.
தான் படைத்த உயிரினங்களை வைத்து நாடகம் நடத்தி அதிலிருந்து உலகுக்கு ஏதோ உணர்த்த விரும்பும் சிவபெருமானின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றானதால், முடிவில் அவரே தோன்றி உண்மையை விளக்கி அவைகளுக்கு மோட்சம் அளித்தார். சிலந்தி அடுத்த ஜென்மத்தில் மன்னராகப் பிறந்து பல சிவாலயங்கள் கட்டும் பணியில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டது. அதில் சுவையான விஷயம் என்னவென்றால், அந்த கோயில்கள் எல்லாவற்றிலும் கர்ப்பகிரகத்தை ஒட்டிய பாதை மிகவும் குறுகலாகவும், யானையின் தும்பிக்கை கூட நுழையமுடியாத வகையில் இருக்கும். யானையும், நாகமும், மோட்சத்தை அடைந்தன.
மற்ற சில புராணங்கள்: சிவபெருமானின் மனைவி, மலைமகள் பார்வதி தேவி ஒரு சாபத்தின் காரணமாக மானிட பிறப்பெடுத்து, இங்கு வந்து தவமியற்றி மீண்டும் தெய்வ பதவியை அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அதேப் போல இங்கே கூறப்படும் இன்னொரு பிரபல கதை கண்ணப்பன் எனும் வேடன் பற்றியது. சிவலிங்கத்தின் கண்ணிலிருந்து கண்ணீரும், ரத்தமும் வருவதைக் கண்ட கண்ணப்பன் தனது இரண்டு கண்களையும் பறித்து சிவலிங்கத்திற்கு வைத்ததாகவும், அதனால் மகிழ்ச்சியுற்ற சிவன் அவன் முன் தோன்றி அவனுக்கு மோட்சம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
கோயில் அமைப்பு:இந்த கோயில் மலையின் ஒரு பகுதியை செதுக்கி கட்டப்பட்டது.பல்லவர்களால் கட்டப்பட்ட காளஹஸ்தி கோயிலின் பிரகாரங்களை,வெவ்வேறு காலகட்டங்களில் சோழ அரசர்களும், விஜயநகர அரசர்களும் கட்டினர்.
கோயில் சிறப்பு: ஸ்ரீ காளஹஸ்தி கோயில் கர்ப்பகிரகத்தில் விளக்கு ஒன்று உள்ளது. அது எப்பொழுதும் காற்றின் இயக்கத்தை பறைச்சாற்றும் வகையில் இலேசாக அசைந்துக்கொண்டேயிருக்கும். சன்னிதானத்தின் கதவுகள் மூடப்பட்டாலும் சாளரங்கள் கூட இல்லாதிருந்தாலும், அந்த விளக்கு அசைந்தப்படியே இருக்கும். சற்று உற்றுப்பார்த்தால் வாயுலிங்கமே அதன் பலனால் அசைவது தெரியும். இங்கே இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், எல்லா அபிஷேகங்களும் உற்சவருக்கு மாத்திரமே நடக்கும். மூலவர் லிங்கம், இதுவரை மனிதனால் தொடப்பட்டது இல்லை.
இது மட்டுமின்றி, இத்தலம் ராகு, கேது தலமாகவும் போற்றப்படுகிறது.
உற்சவம்: இது சிவத்தலமாதலால் இங்கே மகாசிவராத்திரி படுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் 13 நாட்களுக்கு உற்சவம் நடைப்பெறும்.
எப்படி செல்வது: ஸ்ரீ காளஹஸ்தி திருப்பதிக்கு அருகில் இருப்பதால், திருப்பதிக்கு சென்று அங்கிருந்து செல்லலாம். சென்னை, திருப்பதி மற்றும் பல முக்கியமான ஊர்களிலிருந்தும் நேரடியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ரயில் மார்கமாக செல்லவேண்டுமென்றால், காளஹஸ்தியில் சிறு ரயில் நிலையம் இருந்தாலும், அருகிலுள்ள முக்கிய ரயில்நிலையங்கள், ரேணிகுண்டா, மற்றும் கூடூர் ஆகும்.
எங்கே தங்குவது ஸ்ரீ காளஹஸ்தியிலேயே ஒரு சில நல்ல ஓட்டல்களும், சத்திரங்களும் உள்ளன. இருப்பினும் திருப்பதி மிக அருகிலேயே இருப்பதால், திருப்பதியில் தங்கியிருந்து ஏழுமலையானை தரிசித்துவிட்டு அப்படியே ஸ்ரீ காளஹஸ்திக்கும், திருச்சானுருக்கும் கூட சென்று வழிப்பட்டு வரலாம்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|




