You are here: Home ஆன்மீகம் ஆலய பிரவேசம்

ஆலயபிரவேசம் - திருவண்ணாமலை

E-mail Print
User Rating: / 1
PoorBest 

thiruvannamalaiநம்மூரில் என்றுமே பட்டிமன்றங்களில் மிகப் பிரதானமாக இருக்கும் தலைப்புகள் இரண்டு. ஒன்று கடவுள் இருக்கிறாரா இல்லையா என்றும் இன்னொன்று சிவம் பெரிதா வைணவம்(விஷ்ணு) பெரிதா என்றும் எப்பொழுதுமே ஏதேனும் ஒரு விவாதம் நடந்துக் கொண்டிருக்கும்.

கடவுளே இல்லை என்று சொல்லும் பலரும் இயற்கைதான் கடவுள் என்று சொல்வதுண்டு. இந்த இரு விவாதங்களுக்கும் ஓரளவு சம்மந்தப்பட்டிருக்கும் ஒரு திருத்தலம் திருவண்ணாமலை.

 

இந்த உலகமே நீர், நெருப்பு, வானம், நிலம், காற்று என்னும் பஞ்சபூதங்களால் ஆனது. சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் (வானம்), காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில் (நிலம்), திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம் (நெருப்பு), திருகாளஹஸ்தி (காற்று), திருவானைக்காவல் (நீர்) என மிகப் பிரபலமான சிவாலயங்கள் இந்த பஞ்சபூதங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. நாம் இவ்வாரம் பிரவேசிக்கப் போகும் திருவண்ணாமலை ஆலயத்தில் அருணாச்சலேஸ்வரர் ஜோதிமயமாக காட்சியளிக்கிறார்.

தலவரலாறு: ஒரு சமயம் ஆக்கல் கடவுளான பிரம்மாவிற்கும், காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவிற்கும் யார் உயர்ந்தவர் என்று போட்டிக் கிளம்பியது. இவர்களது போட்டிக்கு நடுவரான சிவபெருமான் தனது முடியையும் அடியையும் யார் கண்டுப்பிடிக்கிறார்களோ அவரே உயர்ந்தவர் என்றுக் கூறினார். அதனால் மகாவிஷ்ணு அடியைக் கண்டுப்பிடிக்க வசதியாக வராக உருவமெடுத்து பூமியைத் தோண்ட ஆரம்பித்துவிட்டார். பிரம்மா பறவையாக உருமாறி முடியைக் கண்டுப்பிடிக்கும் நோக்கோடுப் பறக்க ஆரம்பித்துவிட்டார். சிவபெருமான் அக்னி வடிவில் ஜோதிமயமாக ஒரு கட்டத்தில் மகாவிஷ்ணு தன் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டார். பிரம்மாவோ உயர உயரப் பறந்தும் எதுவும் அகப்படாததினால் என்ன செய்வது எனப் புரியாமல் குழம்பினார். அந்த சமயம் தாழம்பூ ஒன்று காற்றில் பறந்து கீழ்நோக்கி வந்துக் கொண்டிருந்தது. அது நிச்சயமாக சிவனின் தலையிலிருந்துதான் வந்திருக்கக் கூடும் என யூகித்த பிரம்மா அதனிடம் இன்னும் எத்தனை தூரம் என்று விசாரித்தார். அதற்கு தாழம்பூ தான் நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ்நோக்கி வந்துக் கொண்டிருப்பதாகக் கூறியது. அதனால் சிவபெருமானின் முடியை அடைவதென்பது சாத்தியமில்லை என்று அறிந்த பிரம்மா பொய் கூற உத்தேசித்தார். அதற்கு தாழம்பூவையும் பொய்சாட்சிக் கூற வேண்டினார்.

பிரம்மா தன் முடியைக் கண்டுப்பிடித்து சாட்சிக்கு ஒரு தாழம்பூவையும் எடுத்து வந்ததாக பொய் கூறியதும் சிவபெருமான் ஆத்திரமடைந்தார். அதனால் பூலோகத்தில் எங்குமே பிரம்மாவிற்கு ஆலயம் கூடாதெனவும் பொய்சாட்சிக் கூறிய தாழம்பூ இனி சிவபூஜைக்கு உகந்ததல்ல என்றும் சபித்தார். சிவபெருமான் அக்னி வடிவாக நின்ற இடம்தான் திருவண்ணாமலை.

இந்தக் கோயிலுக்கு இன்னொரு முக்கியக் கதையும் உண்டு. அது திருக்கார்த்திகை தீபம் கொண்டாடுவதற்கானக் காரணமும் கூட. ஒரு நாள் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்களை மூட உலகமே இருண்டுப் போனது. அனைத்து உயிர்களும் ஒரு நொடி தவித்துப் போயின. தவறுதலாக செய்திருந்தாலும் செய்த தவறுக்குப் பிராயசித்தமாக காஞ்சியில் மணலால் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து தவமியற்றி வந்தார். அப்பொழுது அவருக்கு காட்சியளித்த சிவபெருமான் அன்னையை திருவண்ணாமலை சென்று தவமிருந்தால் தன் உடலில் பாதியை அடையும் பாக்கியம் கிட்டும் என்றுக் கூறினார். அதனால் உமாதேவி திருவண்ணாமலை சென்று தவமிருக்கத் தொடங்கினார். ஆனால் அங்கு மகிஷாசுரன் என்ற அசுரன் அன்னையின் தவத்திற்கு இடையூறாக இருந்தான். அதனால் துர்காதேவி ஸ்வரூபத்தில் கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று பிரதோஷ நேரத்தில் மகிஷாசுரனை வதம் செய்தார். அப்பொழுது மலையுச்சியில் அக்னி வடிவாக வீற்றிருந்த சிவபெருமான் அன்னையை தன்னில் பாதியாக இணைத்துக் கொண்டார்.

தற்கொலை செய்துக் கொள்ள இருந்த அருணகிரிநாதரை முருகப்பெருமான் காட்சித் தந்துக் காப்பாற்றியதும் இத்திருத்தலமே.

thiruvannamalai gopuramகிரிவலம்: மலையில் வீற்றிருக்கும் கடவுள் என்றால் பொதுவாக மலையுச்சியில் ஏதோ ஒரு இடத்தில் சன்னிதானம் இருக்கும் ஆனால் இங்கே மலையேக் (அண்ணாமலை) கடவுளாக இருக்கிறது. அதுமட்டுமின்றி ’அருணம்’ என்றால் சூரியன். சூரியன் சிவப்பு நிறத்தில் நெருப்பைக் குறிக்கிறது. ’ஆசலம்’ என்றால் மலை. அருணாச்சலம் என்றால் புனிதமான மலை என்று அர்த்தம். இந்த மலை 2668 அடி உயரமானது. இந்த மலையில் இன்றும் நிறைய சித்தர்கள் வாழ்கிறார்கள்.அதனாலேயே இந்த மலையை பௌர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் நல்லதாகக் கருதப்படுகிறது. அதாவது பௌர்ணமி அன்று சித்தர்கள் நடமாட்டம் அதிகம் இருப்பது மட்டுமின்றி மலை முழுவதும் நிறைந்திருக்கும் மூலிகைச் செடிகளின் வாசனையும் மிகுந்து இருப்பதால் அன்று கிரிவலம் வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கும், மனத்திற்கும் மிகவும் நல்லது எனக் கருதப்படுகிறது.

மக்கள் கிரிவலம் சுற்றி வரவேண்டியப் பாதை 14கிமீ ஆகும். இந்த மலையைச் சுற்றி 8 லிங்கங்கள் இருக்கின்றன. இந்த ஒவ்வொரு லிங்கத்திற்கும் ஒவ்வொரு வழிப்பாட்டுப் பலன் சொல்லப்படுகிறது.

இந்திர லிங்கம்: மலையின் கிழக்குப் பகுதியில் இருக்கும் இந்த லிங்கம் இந்திரனால் நிறுவப்பட்டது. இங்கு சூரியனும், சுக்கிரனும் பிரதான நவக்கிரகங்கள் ஆகும். இங்கு வழிப்பட்டால்புகழும், நீண்ட ஆயுளும் கிடைக்கும்.

அக்னி லிங்கம்: தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் இந்த லிங்கம் அக்னி பகவானால் நிறுவப்பட்டது. இதன் பிரதான நவக்கிரகம் சந்திரன். இங்கு வழிப்படுவோருக்கு நோயும், பயமும் விலகும்.

யம லிங்கம்: எமனால் நிறுவப்பட்ட இந்த லிங்கம் அமைந்திருப்பது தெற்குப் பகுதியில். செவ்வாய் கிரகமே இங்கு முக்கியமானதாகத் திகழ்கிறது. இதன் வழிப்பாட்டுப் பயனை சொல்லவேத் தேவையில்லை. இங்கே வழிப்பட்டால் தீர்க்காயுசு நிச்சயம்.

ந்ருத்தி லிங்கம்: தென்மேற்கு பகுதியில் இருக்கும் இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்தது நிருத்தி என்னும் அசுரர்களின் மன்னன். ராகுத் தலமான இந்த சன்னதியில் வழிப்பட்டால் தனம், புகழ், ஆரோக்கியம் தாராளமாக வந்து சேரும். குழந்தையில்லாத் தம்பதியர் இங்கு வந்து வழிப்பட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

வருண லிங்கம்: வருண பகவானால் நிறுவப்பட்ட இந்த லிங்கத்தை வணங்கினால் நோய்கள் தீரும். அதிலும் நீர் சம்மந்தப்பட்ட நோய்கள் குணமடையும். சனி கிரகம் முதன்மையானதாக இருக்கும் இந்த லிங்கம் மேற்கு பகுதியில் இருக்கிறது.

வாயு லிங்கம்: வாயு பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கம் இருப்பது வடமேற்கு பகுதியில். கேதுவின் பிரதான ஸ்தலமான இங்கு வழிப்பட்டால் இதயக் கோளாறுகள், மூச்சு சம்மந்தமான நோய்கள் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நிவர்த்தியாகும்.

குபேர லிங்கம்: வளங்களின் அதிபதியான குபேரனால் உருவாக்கப்பட்ட இந்த லிங்கம் இருப்பது வடக்குப் பகுதியில். இங்கே குரு பகவானே பிரதானக் கடவுள். இங்கே வழிப்பட்டால் சகல செல்வங்களும் வந்து சேரும். வாழ்வில் அந்தஸ்து உயரும்.

ஈசான்ய லிங்கம்: வடகிழக்குப் பகுதியில் இருக்கும் இது 11 ருத்திரர்களில் ஒருவரான ஈசான்யனால் நிறுவப்பட்டது. இங்கு வழிப்பட்டால் மன அமைதிக் கிடைக்கும். இங்கு புதனே முக்கியமாய் திகழ்கிறார்.

கிரிவலப் பாதை முழுவதும் பக்தர்களின் வசதிக்காக சோடியம் விளக்குகள் நிறுவப்பட்டு, ஆங்காங்கு குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த இறை சேவையில் அதிகம் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இசைஞானி இளையராஜா.
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலயம் ஆறுப் பிரகாரங்களைக் கொண்டு மிகப்பெரிய ராஜகோபுரத்துடனும் மிக கம்பீரமாக விளங்குகிறது.

அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்படும் கோயில் மதியம் 11.30 மணிக்கு உச்சிக்காலப் பூஜை முடிந்து சாத்தப்படும் மீண்டும் மாலை 5.30மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும். இக்கோயிலில் ஆறுகால பூஜைகளும் சிறப்பாக நடப்பதுடன் வருடம் முழுவதும் சித்திரை வசந்த உற்சவம், வைகாசி உற்சவம், ஆனி பிரம்மோற்சவம் ஆடிப்பூரம் என அனைத்து மாதங்களிலும் உற்சவங்கள் சிறப்பாக நடைப்பெற்றாலும் கார்த்திகை மாதம் 17 நாட்கள் நடைப்பெறும் கார்த்திகை தீபம் பிரம்மோற்சவம் உலகப் பிரசித்திப் பெற்றது.

எங்கே இருக்கிறது, எப்படி செல்வது?

திருவண்ணாமலை விழுப்புரம் காட்பாடி ரயில் பாதையில் இருக்கிறது. விழுப்புரத்தில் இருந்து 65கிமீ யும், வேலூரிலிருந்து 90 கிமீத் தொலைவிலும் இருக்கிறது. சென்னை, விழுப்புரம், வேலூர், செங்கல்பட்டு என பல ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது. திருவண்ணாமலையில் ஹெலிகாப்டர் தளமும் உள்ளது.

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஆண்டு தோறும், தமிழக அரசு, இவ்வூருக்கு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

திருவண்ணாமலையில் பக்தர்கள் வசதிக்காக நிறையத் தங்கும் விடுதிகள் இருப்பதுடனும் மிகக் குறைந்த வாடகையிலும் கிடைக்கிறது. அதுத் தவிர தனியார் தங்கும் விடுதிகளும் உள்ளது.

சிவபுராணம் நான்கு தலங்களை முக்தி தரும் முக்கியத் தலங்களாகக் குறிப்பிடுகிறது. திருவாரூரில் பிறந்தால், காசியில் இறந்தால், சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலைப் பார்த்தால் முக்தி கிடைக்கும். ஆனால் திருவண்ணாமலைக் கோயிலை நினைத்தாலே முக்திக் கிடைக்கும் என்கிறது. அப்படிப்பட்ட இத்தலத்திற்கு ஒரு முறைப் பிரவேசித்து வாருங்களேன்.

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:):grin;)8):p:roll:eek:upset:zzz:sigh
:?:cry:(:x
Last Updated ( Monday, 04 January 2010 20:38 )  

நித்தியானந்தா ஆபாச வீடியோவை ஒளிப்பரப்பிய ஊடகங்களின் போக்கு

Banner
PROMO
Banner
Maniyosai Ad

ஹெல்த் ப்ளஸ்

பொது - ஹெல்த் ப்ளஸ் - மருத்துவ கட்டுரைகள்
ஹெல்த்
ப்ளஸ்- உயிர்னா வெல்லமல்ல...தேன்!

admin - Saturday, 30 January 2010
’இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே...’ன்னு புரட்சிகவி மட்டுமல்லாம ‘தேன் தேன் தேன்...’னு இன்றைய...மேலும்...
பொது - ஹெல்த் ப்ளஸ் - மருத்துவ கட்டுரைகள்
ஹெல்த்
ப்ளஸ்-நல்லா தூங்க 7 டிப்ஸ்

admin - Wednesday, 06 January 2010
sleepதூக்கம் வராம இருக்கறதுதான் இன்னிக்கு பல பேரோட பிரச்சினையே. ரொம்ப ஓவரா தூங்கி வழியறது ...மேலும்...
பொது - ஹெல்த் ப்ளஸ் - மருத்துவ கட்டுரைகள்
ஹெல்த்
ப்ளஸ் - அண்ணாசி பழம்...

admin - Tuesday, 05 January 2010
pineappleஅண்மையில் எங்களுக்கு வந்த ஒரு மின்னஞ்சல் எங்களை திடுக்கிட வைத்தது. அந்த பகீர்  மெயிலின்...மேலும்...
Banner
Maniyosai Ads

Countdown

தெலுங்கு புத்தாண்டுக்கு இன்னும்
உள்ளன