தமிழகத்தில் உள்ள முக்கியமான மலைவாசஸ்தலங்களில் ஒன்று ஏற்காடு. ’ஏழைகளின் ஊட்டி’ என அழைக்கப்படும் ஏற்காடு கிழக்கு தொடர்ச்சிமலையில் சேர்வராயன் மலைப்பகுதியில் இருக்கிறது.
இந்த இயற்கை எழில்கொஞ்சும் குளுகுளுப் பிரதேசம் கடல் மட்டத்திலிருந்து 1500மீ உயரத்தில் இருக்கிறது. ஏரி, காடு என்னும் இரண்டும் இணைந்து ஏற்காடு என்ற பெயர் வந்தது. அதற்கேற்ப இங்கே ஏரியும் காடு மலைகளும் பிரசித்தம்.
ஏற்காட்டிலேயே மிகவும் உயர்ந்தப் பகுதி சேர்வராயன் மலை. இது கடல் மட்டத்திலிருந்து 5326 அடி உயரத்தில் இருக்கிறது. இந்த சேர்வராயன் மலை சுற்றுலாத் தலமாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த வழிப்பாட்டுத் தலமாகவும் உள்ளது. சேர்வராயன் மலைக்கோயில் மிக பிரசித்தமான குகைக்கோயில். சற்றேப் பெரிய துவாரம் போன்ற நுழைவாயில் வழியாக அனைவரும் குனிந்தே செல்ல வேண்டும். மிகவும் குறுகியப் பாதை என்பதால் ஒரே நேரத்தில் பலர் செல்லமுடியாது. ஒரு நேரத்தில் இருவர் அல்லது மூவர் செல்லலாம். அவர்கள் வெளியே வந்தப்பிறகு அடுத்த மூவர் செல்ல வேண்டும். உள்ளே மிகவும் குளிர்ச்சியாகவும் இருண்டும் இருக்கிறது.
இங்கே பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருப்பது சேர்வராயப் பெருமாளும் காவேரி அம்மனும். ’சேர்வை’ என்பது தமிழகத்தில் மிகவும் புகழ்மிக்க ’முக்குலத்தோர்’ இன மக்களில் ஒரு பகுதியினர் பயன்படுத்தும் ஒரு பெயர். ’ராயன்’ என்றால் தலைவர் என்று பொருள். ஆனால் இங்கு வசிக்கும் பழங்குடியினர் யாரும் ‘முக்குலத்தோர்’ இனத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. இந்தக் கோயிலில் இருக்கும் சேர்வராயன் திருவுருவச் சிலை இங்கு வசித்த பழங்குடியின மக்களின் குடும்பத்தில் வைத்து வழிப்பட்டு வந்த சிலையாக இருக்கலாம். மிகவும் இருண்ட இக்குகைக்குள் எழுந்தருளியிருக்கும் ‘சேர்வராயப் பெருமாள்’ பெயராலேயே இம்மலைக்கு சேர்வராயன் மலை என்ற பெயரும் வநதது.
எங்கும் இருள் சூழ்ந்த அந்த குகையில், அங்கே ஏற்றி வைத்திருக்கும் சிறிய விளக்கின் ஒளியில், சுமார் ஒன்றரை அடியே இருக்கும் சேர்வராயப் பெருமாளின் கரிய திருவுருவத்தில் வைஷ்ணவ அடையாளச் சின்னமான ’நாமம்’ மட்டுமே பளிச்செனத் தெரிகிறது. சேர்வராயப் பெருமாளுக்கு ‘கரி ராமன்’ என்றொருப் பெயரும் உண்டு. சேர்வராயப் பெருமாளும் காவேரி அம்மனும் சுற்றியுள்ள 67 கிராமங்களையும் காத்து வருவதாக நம்பப்படுகிறது.
இந்த குகைக் கோயிலில் காவேரி அம்மன் சமேத சேர்வராயப் பெருமாள் திருவுருவச் சிலைக்கும் பின்னால் குகை நீள்கிறது. இந்த குகை நீண்டுக் கொண்டேப்போய் கர்நாடகாவில் தலைக்காவிரியில் இணைகிறது. ஆனால் குகைக்குள் மூன்று கிமீ தூரத்தில் சுணை ஒன்று உள்ளது. அதையும் தாண்டி செல்லும் குகையில் காற்றும் வெளிச்சமும் இல்லாமல் பாம்புகளின் புகலிடமாய் விளங்குகிறது. திப்பு சுல்தான் போர் காலங்களில் இந்த குகைக்குள்ளேயே பதுங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
சேர்வராயன் மலைக் கோயிலில் ஆண்டுதோறும் மே மாதத்தில் உற்சவம் நடைபெறுகிறது. அதன் விசேஷமாக வருடத்தில் ஒருநாள் வைகாசி விசாகத்தன்று குகையின் உள்ளே 3 கிமீத் தொலைவில் இருக்கும் சுணையிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
கோயிலுக்கு இந்த சிறப்புகளைத் தவிர கோயிலின் எதிரே கிணறு ஒன்று உள்ளது. அதில் கோயில் வளாகத்திலிருந்து எடுக்கப்பட்ட 3 கற்களில் திரும்பி நின்று வீசும்போது ஒரே ஒருக் கல்லாவது கிணற்றில் விழுந்தால் நினைத்தது நடக்கும் என நம்புகின்றனர்.
எங்கே இருக்கிறது? எங்கே தங்குவது?
ஏற்காட்டிலிருந்து 6 கிமீத் தொலைவில் சேர்வராயன் மலை இருக்கிறது. ஏற்காடு பிரபல சுற்றுலாத் தலமாதலால் அங்கே ஏராளமான காட்டேஜ்கள், ஓட்டல்கள் இருக்கிறது. அங்கேயே த் தங்கியிருந்து சேர்வராயன் மலைக்கு சென்று சேர்வராயப் பெருமாள், காவேரி அம்மனை தரிசித்து வரலாம்.
-எல்லோரா விஜயா
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|




