’நீ பத்ரகாளி வேஷம் போட்டுக்கறியா; சரி அப்ப நான் கருமாரியம்மன் வேஷம் போட்டுக்கறேன்.’ ‘ நா போட்டுக்க வேண்டிய எலுமிச்சை மாலைய எங்க வச்சேன்?’ ‘போன வருஷத்த விட இந்த வருஷம் என்னோட சூலம் இன்னும் கொஞ்சம் கனமா இருக்குது.’ இதெல்லாம் நவராத்திரி சமயத்தில் அடிக்கடி கேட்கும் வசனங்கள். ’இதென்ன புதுக்கதையா இருக்கு. நவராத்திரி சமயத்துல உன் வீட்ல என்ன சுண்டல்? என் வீட்ல பட்டாணி சுண்டல் மாதிரி வசனம்தான அதிகம் இருக்கும்...!’ என்கிறீர்களா? நீங்கள் சொல்வது பொதுவாக எல்லா இடங்களிலும் பேசப்படுவது. ஆனால் இதுவோ அழகிய கடற்கரை கிராமமான குலசேகரப்பட்டினத்தில். குலசை என அழைக்கப்படும் குலசேகரப்பட்டினம் திருநெல்வேலியிலிருந்து 68கிமி தொலைவிலும் திருச்செந்தூரிலிருந்து 20 கிமி தொலைவிலும் உள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் கடலோர கிராமமான குலசேகரப்பட்டினத்தில் இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்தப்படியாக நவராத்திரி பண்டிகை படு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 9 நாட்கள் மட்டுமின்றி 365 நாட்களும் இங்கே கொண்டாடப்படும் அம்மன் அருள்மிகு முத்தாரம்மன். குலசை முத்தாரம்மன் என்றால் மிக பிரசித்தம்.
முத்தாரம்மன் பெயர்காரணம்: கிராமங்களில் அம்மைப் போடுவதை முத்து போடுவதாக கூறுவார்கள். அப்படி போட்டிருக்கும் ’முத்தை’ (அம்மை நோயை) ’ஆற்ற’க்கூடிய அம்மன் என்பதால் ‘முத்துஆற்று அம்மன்’ என்பது நாளடைவில் மருவி ‘முத்தாரம்மன்’ என கூறலாயிற்று. அதனால் இங்கே அம்மை நோய் கண்டவர்கள் இங்கு வந்து வழிப்பட்டு குணமடைவது வழக்கமாக உள்ளது.
கிட்டதட்ட 500 ஆண்டுகளுக்கு முன் மைலாடி எனும் ஊரில் ஆசாரி ஒருவரின் கனவில் தோன்றிய அம்மன் தனக்கு சிலை செய்து அதை குலசையிலிருந்து வரும் அர்ச்சகரிடம் கொடுத்தனுப்புமாறு கூறினார். அதே போல அர்ச்சகரின் கனவிலும் தோன்றி ஆசாரி தரும் சிலையை கொண்டு வந்து வைத்து வழிபடுமாறு கூறினார். அம்மன் கனவில் சொன்னதுபடியே அனைத்தும் நடந்தது. தன் உருவத்தை தானே வடிவமைத்துக் கொண்ட அம்பாளுக்கு இங்கே கோயிலமைத்து வழிப்பாட்டு பூஜைகள் நடந்து வருகிறது.
தலப் பெருமை: பொதுவாக எல்லா கோயில்களிலும் சிவனுக்கும், அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கும். ஆனால் இக்கோயிலில் சக்தி மயமாக சிவனும், சிவமயமாக சக்தியும் இருந்து அருள்பாலிக்கின்றனர். குலசை முத்தாரம்மன் கோயிலில் எங்கும் காணமுடியாத அதிசயமாக இங்கு மூலவர் ஞானமூர்த்தீஸ்வரரும், அம்பாள் முத்தாரம்மனும் சுயம்புவாக தோன்றி ஒரே விக்கிரகமாக வடக்கு திசை நோக்கி வீற்றிருக்கின்றனர்.
திருவிழா: குலசேகரப்பட்டினத்தில் நவராத்திரி விழா பெரும் திருவிழாவாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில் ஊர் முழுவதும் உள்ள ஆட்ட கலைஞர்கள் அம்மன் வேடமிட்டு தெருவெங்கும் நடனமாடி திருவிழா நடத்த வேண்டிய தொகையை வீடுகள்தோறும் காணிக்கையாக பிச்சையெடுப்பர். புரட்டாசி மாதம் நவராத்திரி சமயத்தில் ஊரெங்கும் ஆடல் பாடல் களைக் கட்டும். இதில் அசுரனை வதம் செய்த பத்ரகாளியம்மன் வேடத்திற்கு சற்று மவுசு அதிகம். ஏனெனில் கோரைப் பற்கள், தொங்கும் நாக்கு என பார்க்கவே அச்சம் தரும் இவ்வேடத்தை போட்டுக்கொள்வதும் சற்று சிரமம்.
நவராத்திரி 9 நாட்களும் ஆட்டம் பாட்டம் என கொண்டாடிவிட்டு 10ம் நாள் விஜயதசமியன்று கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைப்பெறும். இந்த நவராத்திரி கொண்டாட்டமே குலசேகரப்பட்டினத்தின் மிகப்பெரும் திருவிழாவாகும். இதைத் தவிர ஆடிக்கொடை திருவிழா, ஐப்பசி விசு, திருக்கார்த்திகை , மகாசிவராத்திரி போன்ற தினங்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அம்மை நோய் கண்டவர்கள் நலமடைய இங்கே பிரார்த்திக்கின்றனர். மேலும் ஊன்முற்றவர்கள், மனநிலை பாதிப்படைந்தவர்கள் சொத்துகள் இழந்தவர்கள், வியாபார விருத்தியடைய விரும்புபவர்கள் ஆகியோரும் மாவிளக்கு பூஜை, அங்கபிரதட்சனம், தீச்சட்டி எடுத்தல் வேல் அம்பு குத்தல் என தங்களால் இயன்ற நேர்த்தி கடன்களை செலுத்தி பலனடைகின்றனர்.
-எல்லோரா விஜயா
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




I am a Research Scholar .So I want to trace out loane murder case at kulasekarapattinam.So that I want only the life history of Mr. W. Loane.So Please reply me immediately